பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

17

 அனுதாபம் கொள்வது கிடையாது-ஏன் கொள்ள வேண்டும்? - வயோதிகரை வெறுத்து வாலிபரைக் கல்யாணம் செய்து கொள்ளும் பெண் மட்டும் தீர்க்க சுமங்கலியாக இருந்து விடுகிறாளா, என்ன?

எது எப்படியிருந்தபோதிலும் எந்த வித்தியாசமும் பார்க்காத மரணம் ஒரு புதிர்; எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இன்றுவரை விண்டுரைக்க முடியாமல் இருக்கும் விந்தை மிக்க புதிர். அந்தப் புதிருக்கு முன்னால் மனிதன் தன்னைப் பகுத்தறிவுள்ளவன் என்று சொல்லிக்கொள்வதற்காகப் பரிதாபப்படாமல் பிறருக்காகப் பரிதாபப்படுவது விந்தையிலும் விந்தையல்லவா?

தேக தத்துவ ரீதியாகப் பார்த்தாலும் சரி, மனோதத்துவ ரீதியாகப் பார்த்தாலும் சரி - இரண்டிலுமே வாலிபரைவிட வயோதிகர் மேல் என்பேன் நான். இதை அனுபவ பூர்வமாகச் சொல்லவில்லை; என்னைச் சுற்றி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும் ஊடுருவிப் பார்த்தே சொல்லுகிறேன்.

இந்த நிலையில், மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் அவனுக்கு அன்பை விட்டால் வேறு கதியுண்டா?

இல்லை; இல்லவே இல்லை.

அத்தகைய அன்பு-தெய்வீகமான அன்பு - கேவலம், உடலை ஒட்டி வளர்வதிலும் உடலை ஒட்டித் தேய்வதிலும் ஏதாவது அர்த்தமுண்டா?

இல்லை; இல்லவே இல்லை.