பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

 ‌நீங்கள் பெறும் உயரிய கல்வி, சமூகத்தினிடம் உங்களுக்குள்ள பொறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே, உங்கள் தனி முன்னேற்றத்துடன் கூடவே, உங்களிடமிருந்து போதிய வரவினை மீண்டும் எதிர்பார்க்கச் சமூகத்திற்கு உரிமையுண்டு. அதிகப் பணம் என்னும் அளவில் அல்ல பணி என்னும் அளவில் சமூகத்தை சீராக்கவும் இருண்ட சந்து பொந்துகளில் ஒளியேற்றவும் அழுக்கடைந்த இடங்களில் ஒளிபாய்ச்சவும் துயருற்றோருக்கு ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கையிழந்தோருக்கு நம்பிக்கையூட்டவும் ஒவ்வொருவருக்கும் புதிய வாழ்வளிக்கவும் இப்பணி பாங்குடன் அமைய வேண்டும்.

இது வரவேற்கதக்க, சீரிய குறிக்கோள் என்பனை ஒருவரும் மறுக்கமாட்டார். ஆனால், எவரும் இக்குறிக்கோளைச் செயற்படுத்திட முன் வர மாட்டார். இருப்பினும், நம் பண்டைய சிந்தனையாளர்களும் இக்காலச் சிந்தனையாளர்களும் 'அறிவு செயலில் வெளிப்படுகிறது, என்பதனை அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளனர்.

பணி பயனாக அமையாவிடில், அறிவுரை இனிய வெற்றுரையே. ஜெபர்சன் கூறியுள்ளது இதுவே:"வாய்ப்பு என்னும் மக்களாட்சியிலிருந்து எழும் அருஞ்செயல் என்னும் முடியாட்சியினை நாம் கனவு காணவேண்டும்."?

சமூகத் தொண்டாற்றும் தலையாய பணிக்கு உங்கள் உதவியினையும் ஒத்துழைப்பினையும் நான் நாடும்பொழுது, அருள் கூர்ந்து கண் சிமிட்டாதீர், புன்னகை பூக்காதீர், அதெல்லாம் சொல்வதற்கு மிக எளிது என்று சொல்லாதீர். வழியில் தட்டுப்படும் இடர்களைப்பற்றி அறியாதவன் அல்லன் நான். உங்கள் மீதுள்ள சூழ்நிலையின் செல்வாக்கினையும் நான் ஒதுக்கித் தள்ளுபவனுமல்லன்.