பக்கம்:அஞ்சலி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256 லா. ச. ராமாமிருதம்

இனி உனது என்பதேயில்லை. எல்லாம் என்னதுதான்.

பம்பரத்தின் விசுவரூபம் பார்வை முற்றிலும் அடைத்து பம்பரத்தின் உரு அதில் மறைந்தது. அவள் இப்போது உணர்ந்தது அதன் வேகம்தான். அவள் கெட்டியாய் பற்றிக்கொண்டிருக்கும் தனியுணர்வைத் தன்னோடு அடித்துச் செல்லும் அம்பர வேகம்.

“மாட்டேன் மாட்டேன் மாட்—”

கும்மட்டியில் நெருப்பு படபடவென வெடித்தது. கூடம் முழுதும் பொறிகள் சிதறின. கணத்தில் தணல் கருகிற்று. -

அம்மா மாடிக்கு ஓடி வந்தாள். விளக்கைப் போட்டாள்.

ஏகாவை அணைத்த அணைப்பினின்று அவன் முகம் நிமிர்ந்தது. அவன் விழிகள் பெருகின.

“ஏகா போயிட்டாம்மா.”

“அவளைக் கீழே விடு.”

ஏகாவின் கண்களில் தேங்கிய துயரம் ஸகிக்க முடியவில்லை. அம்மா, கண்களை மூடினாள்.

“வேதா, ஏகா போகவில்லை. ஏகத்தில் கலந்துவிட்டாள். அவள் இப்படி இருப்பதைவிடப் போனதே மேல். அவளுக்கே நன்மை வேதா, நம் குறைகள்தாம் நமக்கு ஆதாரம், நம் துணை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/266&oldid=1026871" இலிருந்து மீள்விக்கப்பட்டது