பக்கம்:அலைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 O லா. ச. ராமாமிருதம்


"இருட்டுவேளை இடம் புதிசு, ஒன்றுமில்லேன்னா என்ன அர்த்தம்?"

"ஒன்றுமில்லை பெரியப்பா மெழுகு ஒரு சொட்டு சிந்தி விட்டது."

திகைப்பில் ஒரு கணம் 'க்யூ' முழுக்க வாயடைத்தது. மறுகணம் அத்தனை பேர்களின் சிரிப்பும் ஒரு பிழம்பாய்ப் பீறிட்டது.

கலியாணப் பெண்ணுக்கு முகம் கவிழ்ந்தது. கூட்டத்தில் குஷி இன்னும் தூக்கிற்று. ஆரவாரம் அதிகரித்தது. அப்போது எங்கள் இருபக்கங்களிலும் சாப்பாட்டுக்கு இன்னும் காத்துக் கொண்டு நின்ற பெண்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்-கட்டைக்குரல்-புகைந்தது.

"ஏற்கெனவே என் பிள்ளைக்கு மிலிட்டேரிலே வேலை,

“சாப்பாட்டு வேளையில் விளக்கணைஞ்சு போச்சேன்னு நான் அடிவயத்துலே நெருப்பை கட்டிண்டிருக்கேன். நீ தாலி கட்டினதும் கட்டாததுமாய் அவனைச் சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சூடு!”

கழுத்தை வெட்டி விட்டாற்போல் மணமகளின் தலை இன்னும் தாழ்ந்து தொங்கிற்று. அவள் கை மெழுகுவர்த்தி வெடவெடவென உதறிற்று. திரியடியில் மெழுகின் தண் துளும்பிற்று. அவன் அவள் கையிலிருந்து மெதுவாய் வர்த்தியை வாங்கிக் கொண்டான். மெழுகின் சுடரில் ஒளி வீசிக்கொண்டு அவன் புறங்கையின் மேல் ஒரு அனல் சொட்டு இறங்கிப் பொரிந்து மலர்வது கண்டேன்,

ஆனால், அது மெழுகின் சொட்டு அல்ல.

ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்றுதான் நினைத்துக் கொண்டபோது, அவன் கையைத் தூக்கி அந்த இடத்தை நக்கிக் கொண்டான்.

அவனுக்கு நாளைக்கு வண்டி. இன்னும் ஆறுமாதம் கழித்துத்தான் வருவான். பிறகுதான் சாந்தி கலியாணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/252&oldid=1286370" இலிருந்து மீள்விக்கப்பட்டது