பக்கம்:அவள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜ்வாலாமுகி 45

 இவற்றில் ஆவாஹனமாகி,

தொன்றுதொட்ட வழிபாடு, புராணம், ஸ்தலமகிமை, தீர்த்த விசேஷம், ஐதீகம், பூஜை, நேமம், ஜபம், நிஷ்டை நாட்டுக் கலாசாரம், பரம்பரைக் கலாசாரம், குடும்பக் கலாசாரம், துதிப்பவரின் தனித்தனிக் கலாசாரம், சொந்தக் கலாசாரம் இத்யாதிகளில் காலம்காலமாய் ஊறி வளர்ந்திருக்கும் நம்பிக்கை உரு அல்லவா நீ! அவளின் 'நான்' இன் பிம்பம்தானே நீ!

உன் படம் தூண்டும் கற்பனையில், லால்குடியில், கர்ப்பக்ரஹத்தில் உன் சன்னிதானத்தில் நிற்கிறேன்.

சித்தம் போக்கு அதன் போக்கு, உன் போக்கில் செல்கிறது.

நேற்று, இன்று, நாளை காலத்தின் முக்கணுவையும் ஊடுருவி நிற்கிறாய்; ஆனால் அகப்படமாட்டாய். உன் கண்ணாமூச்சி, விளையாட்டில், நீ என் கண்ணைக் கட்டினாலும், உனக்கு நான் ஒளிந்தாலும் தோல்வி எப்போதும் எனக்குத்தான்.

நேற்று - உன் நினைவு முகத்தோடு ஐக்கியமாகி விட்டது.

இன்று - 'நேற்றை'யின் சட்டையுரிப்பு இரவு கண்மூடித் திறந்தாள்.

நாளை- புது உலகம், 'இன்று' இன் சட்டையுரிப்பு.

நேற்று இன்று நாளை என்று அன்றன்று நெஞ்ச நெகிழ்ச்சியின் கண்ணீர் அருவியில் குளித்து உன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் சதாயெளவ்வனி நீ.

நித்யத்வத்தின் ஹோமகுண்டத்தினின்று எழும் - ஜ்வாலாமுகி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/89&oldid=1496411" இலிருந்து மீள்விக்கப்பட்டது