பக்கம்:அவள்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456லா. ச. ராமாமிருதம்



அண்டா நிறைய வென்னீர் வெச்சு தாயையும் குழந்தையையும் குளிப்பாட்டி, அத்தை சொல்படி சாதமும் ரஸமும் வெச்சு ஆவி பறக்கக் கிளறி, பிள்ளை பெற்றாள் ஆசைப்பட்டுத் தொட்டுட்ட சட்டியிலேயே நிரப்பிக் கொடுத்து, கூடவே கல்லாட்டம் ஒரு பழம் புடவை, குழந்தைக்குப் பழந்துணி, கையில் ஒரு அரை ரூபாய்த் காசையும் கொடுத்து அனுப்பிச்சுட்டு, அப்புறம்தான் அத்தை ஸ்னானம் பண்ண கொல்லைப்புறம் போனார்.

கிளிஞ்சல் சுண்ணாம்பு மாதிரி மாமா கூடத்தில் கொந்தளிக்கிறார்:

'ஆத்துக்காரன் அரையை மூட வேட்டியில்லாமல் காற்றில் பறக்கறானாம்; இவள் கும்பகோணத்தில் கோதானம் பூதானம் பண்ணற இந்த அக்ரமத்தைக் கேக்கறத்துக்கு யாருமில்லையா?”

கோபம் வந்தால் கூடவே பிராசமும் எப்படி வரது?

ஆனால் அத்தையா இதுக்கெல்லாம் கிணுங்கறவர்! அது கோவர்த்தன மலை. கோவர்த்தனத்தின் அடியில் ஒண்டினவாளுக்கெல்லாம் நிழல்.

அன்றிரவு வேலை முடிஞ்சு படுக்கையான பின்னும் எனக்கென்னவோ கிடக்கை கொள்ளவில்லை. கீழே இறங்கி வந்தேன். குத்து விளக்கில் எண்ணெய் அதிகமோ என்னவோ, நின்னு எரியும் சுடரில் கூடம் முழுக்க புஷ்பம் போல் மெத்துனு. இருளோடு கலந்த மென்மையானதொரு வெளிச்சம்.

ஊஞ்சல் சங்கிலி முனகித்து.

மெதுவாய்ப் போய், கால்மாட்டில் உட்கார்ந்து அத்தை காலை லேசாய்த் தொட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/500&oldid=1497672" இலிருந்து மீள்விக்கப்பட்டது