பக்கம்:அவள்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504 லா. ச. ராமாமிருதம்



இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா-அப்பா, பிறகு நாங்கள்--நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழி பாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக் கோட்டைமேல் உச்சிப்பிள்ளை யார் எழுந்தருளியிருப்பது போல் பாட்டி மூன்றாவது மாடியில் எழுந்தருளி யிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ராகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தைத் தூக்கிக்கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பாகமா, சாதமா-எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக்கொண்டு, முகத்திலும் காவிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம் காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறு கையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.

சில சமயங்களில் அம்மா அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில் 'சடக் கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட் டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/548&oldid=1497351" இலிருந்து மீள்விக்கப்பட்டது