பக்கம்:அவள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 57


பாஸ்கர், உடனே தப்பாக நினைக்க அவசரப்பட்டு விடாதே. எங்களிடையே ஒரு தப்பும் கிஞ்சித்தும்கூட நேர்ந்துவிடவில்லை. அனுவுக்கு என் நிலை பற்றி ஒன்றுமே தெரியாது. தெரிந்தாலும் அவள் எனக்குக் கிடைக்கமாட்டாள். அதனாலேயே என் சத்தியத்தை, உன் முன்னிலையில், பொட்டென்று உடைக்கிறேன்.

இதனாலேயே it is time for my exit. ஆமாம், சும்மா கதையிலும், வம்பிலும், ஏன் நடப்பிலும் தான், 'நாக்குப்பட்டே நைந்துபோன இந்த eternal triangle நிலையை நான் உண்டாக்கப் போவதில்லை. I am going away. எங்கே? இந்த நிமிஷம் வரை அறியேன். இப்போதைக்கு இந்தக் கடிதத்தை எழுதி முடிப்பதில்தான் என் முழு முனைப்பு. என் தன்மையின் உண்மையை, அல்லது என் உண்மையின் தன்மையையா? அதன் செப்புச் சுருளைப் பிரித்துப் படித்துப் பார்த்துவிடணும். அவரவர் தன்மையின் உண்மை, கண்ணுக்குப் புலனற்ற தாமிர இலையில் வரைந்து ஒவ்வொரு பிறவியினூடே, அதன் மூளையில் செருகி அனுப்பப்படுகிறது என்று எனக்குப் பிடித்தமானதொரு கற்பனை. தாமிரமாக இருப்பானேன்? என்னைக் கேட்காதே. ஆசாரத்துக்குத் தாமிரம் என்று நம் ஐதீகம். என்னதான் பகுத்தறிவு வாதத்திலும் இப்படி ஒரு சபல புத்தி, அசடு. பாஸ்கர், எவனுமே முழுக்க முழுக்கப் பகுத்தறிவாளி அல்லன். எப்படியோ ஒரு பழம் பிசுக்கு நம்முடன் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது. ஜன்மப் பிசுக்கு? இல்லை அதன் மறுபெயரில் Call it the greasiness of evolution. விதி, நம்பிக்கை, கடவுள் என்கிறோமே இவையெல்லாமே உயிர்த் தொடர்பின் காரைப் பூச்சுத் தானே! நான் விஷயம் தாண்டிப் போகவில்லை. என்னுடைய all out sinceriety அதுவே ஒரு நாடக பாணியாக ஆகிவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை தான். ஆகவே, என் பிரியமுள்ள சினேகிதனே, here goes.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/101&oldid=1496852" இலிருந்து மீள்விக்கப்பட்டது