பக்கம்:அவள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 353

குருக்கள் தூக்கத்தின் மெத்தான ஆலிங்கனத்தில் புரண்டு படுத்தார். செருகிய இமைகளின் கீற்றில் எட்ட ஒரு நீலப்பொறி தெரிந்தது. அது கிட்டக் கிட்ட நெருங்குகையிலேயே பெரிதாகிக்கொண்டே வந்து, அந்த ராக்ஷஸச் சுடரின் தண்ணொளி கண் கூசிறறு. கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தபோது பொலபொலெனப் புலரும் வேளை, திண்ணையில் அவர் பக்கத்தில் வெகு நெருக்கமாய், அவர் மேல் இடித்துக்கொண்டு ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. பதறி எழுந்தார்.

"நான்தான் அப்பா!' குரலில் ஆண் கார்வை. அவர் தோளைத் தொட்டாள். சிரித்தாள். ஏன் பயப்படறேள்?" பாவாடைத் தாவணியில் மதமதவெணப் பதினாறு.

குருக்களுக்கு முகத்தின் அங்கங்கள் துடித்தன. வாயுள் நாக்குத் தடித்தது. இழுத்துவிடுமோ? நீயா?”

'ஏன், நானாயிருக்கப்படாதா?” கைகள் கூப்பிக்கொண்டன.

"ஜகன்மாதா, நீ என்னை அப்பா என்று அழைக்கும் விபரீதம் என்ன? அபராதம் ஏதேனும் நேர்ந்துடுத்தா? மன்னிச்சுடு தாயே, மன்னிச்சுடு.” கண்கள் துளும்பின. '

உம்-என்ன உளறல்? ஆசைப்பட்டு வந்திருக்கேன்!”

அவர் பார்வை அவரை அறியாமலே கர்ப்பக்ருஹத்துள் சென்றது.

"அங்கே என்ன இருக்கு, கல்தான்' கைகொட்டிச் சிரித்தாள். 'நான் இங்கேன்னா இருக்கேன், அப்பா நீங்கள் வளர்த்த நான். அப்பா, நீங்கதான் சொல்லணும். மனுஷாள் என்னைக் கல்லில் பார்க்கத் தயராயிருக்காள், ஆனால் உயிரில் பார்க்க ஏன் பயப்படறாள். அவர்களுக்கே இஷ்டமில்லையா?”-அவள் கண்கள் பள பளத்தன. கண்ணீரிலா? அ.-23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/397&oldid=1497749" இலிருந்து மீள்விக்கப்பட்டது