பக்கம்:அவள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 லா. ச. ராமாமிருதம்



தான். அவன் தலைமயிர் கூட ஒரு தினுசான செம்பட்டையினால், ஹோமகுண்டத்தின் நெருப்புப் போல் திகுதிகுவென எரிந்தது. பசுபதியின் கண்கள், கூசினாற்போல் லேசாய் மங்கின. யோசனையான புன்னகையுடன் திரும்பி வந்தான். மூவரும் பாலத்தின் நடுவே நின்றதும் பாலம் உடலை முறித்துக்கொண்டு முனகிற்று.

கண்ணுக்கு எட்டியவரை வயற் பரப்புகள் பூமியைக் கட்டானிட்டு அறுத்தன. மைல் தூரத்தில் ரயில்வே ஸ்டேஷனின் செங்கல் கட்டடம் பளிச்சென்றது. தந்திக் கம்பங்களின் உச்சியில் காற்று ஊடுருவுகையில் தந்திகள் சுருதி மீட்டின. மூலைக்கு மூலை, கண்ணுக்கு எட்டிய வரையும் அதற்கப்பாலும் தண்டவாளம் சீறிக்கொண்டு ஒடிற்து. நகைப் பெட்டியைத் திறந்ததும் மூடியின் உள் மெத்தைபோல் நீலம் பிதுங்கி நின்றது.

"அப்பா அப்பா, தோ பார்! அதோ, அதோ" பையன் கையைக் கொட்டிக்கொண்டு குதித்தான்.

சவுக்குத் தோப்பின் உச்சியில் வானத்தை அசுத்தமாய்க் கிறுக்கிக்கொண்டு ஒரு கறுப்புத் திட்டு கிளம்பிற்று. நிமிஷத்துக்கு நிமிஷம் புகைப்படலம் அகன்று விரிந்தது. பாறையாய்க் கபம் கட்டிப்போன தொண்டையில் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு கத்தல் நீளமாய்க் கிளம்பிற்று

சவுக்குத் தோப்பின் மறைவிலிருந்து ரயில் வெளிப்பட்டதுதான் தாமதம். பையன் வெறி பிடித்தவனாகி விட்டான். அவன் தாய் அலனை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். திமிறும் திமிறலில் எங்கே பாலத்திலிருந்து விழுந்துவிடுவானோ என்று பயம். ஆனால் அவள் நாட்டம் கவலையோடு அவள் கணவன் மேல்தான் பாய்ந்தது. பசுபதி மெளனமாய் வண்டித் தொடரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/206&oldid=1496346" இலிருந்து மீள்விக்கப்பட்டது