பக்கம்:அவள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

லா. ச. ராமாமிருதம்

விட்டாள். வலி தாங்க முடியல்லே. But how wonderful! வயலினில் எஃகுத் தந்தியில், பஞ்சமத்திலும் அதி பஞ்சமம் சூக்ஷ்ம பஞ்சமம் என வலி தற்சமயம் அந்த ஸ்தாயியில் தான் தெறித்துக்கொண்டிருக்கிறது. போதாது. சாக்ஷாத் கார பஞ்சமம் அதாவது அது அதுவே தான். அதற்குமேல் கிடையாது. வேறும் கிடையாது. அங்கு சேர்ந்துவிட்டால் அதற்கு மேலும் நோக இடமில்லை அல்லவா? ஆனால் அப்படி ஒன்று இருக்கிறதா? இது சங்கீத பாஷை அன்றோ? ஆனால் இதற்கு music தெரியத் தேவையா? இசை ஒரு கலை எனும் பதவிக்கும் முன்னால், அதுவே வாழ்வின், அடிப்படைத் தன்மை என்று சொல்வது உண்மைக்கு இன்னும் நெருக்கமாகும் என்று நினைக்கிறேன்.

“அழியமாட்டேன். புதையமாட்டேன். சமயங்களில் என்னை உனக்கு ஞாபகமூட்ட புதைவினின்று வெளிப்படுவேன்.”

கண்கள் பெருகின.

Ecstasy. ஆயிரம் ஸிகரெட், ஹஷீஷ் இதற்கு ஈடாமோ?

சிகரெட்டை எடுத்து, பற்றவைக்குமுன், நுனியை இடது புறங்கைமேல் தட்டினவன், என்ன தோன்றிற்றோ, அப்படியே எறிந்துவிட்டு உள்ளே வந்து, மீண்டும் மேசைக் கெதிரே, மீண்டும் நாற்காலியில்—

சொச்சத்தை எழுதித்தான் ஆகணுமா? பிரியமுள்ள சினேகிதனுக்கு—உண்மையில் இந்தக் கடிதம் உனக்கா? இல்லை. அவளுக்கா? No Wrong again. உண்மையில் எனக்கல்லவா? அப்போ இது அவசியம்தானா? why not? இது ஒரு சுய கணிப்பு அல்லவா? Discovery of me. அதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.

No, அந்த trend கலைஞ்சுபோச்சு. அதனாலும் என்ன? ஒவ்வொரு Mosaic detailஐயும் ஆராய்வதானால் நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/118&oldid=1496917" இலிருந்து மீள்விக்கப்பட்டது