262 O லா. ச. ராமாமிருதம்
ஒரு காலை வாசற்படிமேல் வெச்சுண்டு ஜகதா நின்னாள்.
“அப்பாவுக்கு நான் வந்தது அவ்வளவா பிடிக்கல்லை போலிருக்கு அம்மா, ஒரு தினுஸாப் பேசறார்!’’
“நான் ஒண்ணுமே சொல்லலையே!" என்கிறார், அவர் திருதிருன்னு முழிச்சுண்டு. அவர் போடறது வேஷமா நிஜமான்னு எப்பவுமே தெரியாது.
"அப்பா என்னை இன்னும் வான்னு சொல்லல்லேம்மா’’
“நான்தான் சொல்றேனே; உன் அப்பா சுபாவம் உனக்குத் தெரியாதா ஜகா?"
“நீ சொன்னால் போதுமா அம்மா? பெத்தவாளும் பொண்ணுமானாலும் கோத்ரம் மாறிப்போச்சு, இடம் மாறிப் போச்சுங்கறது எல்லாம் இருக்கே! இன்னும் எவ்வளவோ இருக்கே!”
“நீங்கதான் வாயைத் திறந்து வான்னு சொல்லுங்களேன்: வாய் முத்து உதிர்ந்து போயிடுமா?”
"ஜகதா வா வா வா வா வா-"
அப்புறம்தான் ஜகதா காலையெடுத்து வீட்டுக்குள் வெச்சாள். அடேயப்பா, ஜகதா ரொம்ப ரோசக்காரி. இவ்வளவு முன்கோபத்தை வெச்சுண்டு ஒரு பொம்மனாட்டி குடித்தனம் பண்றான்னா, மாப்பிள்ளை சாதுவாய் வாய்ச்சது அவளுடைய-நம்முடைய பூர்வ பூஜாபலன்னு தான் சொல்லணும்,
ஆனால் அப்புறம்கூட அவள் அப்பா அவளை சும்மா விடல்லே, அவர் நாக்கு சும்மாயிருக்காது. அதுலேதான் பாம்பு விளையாடிண்டேயிருக்குமே!