பக்கம்:அலைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 107


வளர்ந்துகொண்டிருந்தது. அதுவே ஆண்டாளுக்குத் தெரிந்ததோ இல்லையோ? தெரிந்தாலும் அவள் காட்டிக்கொள்ள வில்லை. தெரிந்தால்தான் என்ன, அவளுக்குப் பயமா? எசமானியம்மா அவள் பக்கம் இருக்கும்வரை, அவளை யார் என்ன செய்ய முடியும்?

ஆனால், ஒன்று: ஆண்டாளுக்குத் திரிசமம் பிடித்த கையல்ல. வெள்ளிப் பண்டங்கள், சில்லரை, நோட்டு, கைக் கடியாரம், பவுண்டன் பேனா, தங்கப் பொத்தான்--நினைவாகவோ, மறதியாகவோ வைத்த இடத்தில் வைத்த படி இருந்தன. நம்பி அவளை வீட்டில் வைத்துவிட்டு எங்கு வேணுமானாலும் செல்லலாம். நாளடைவில் அம்மாதிரியே பல காரியங்கள், பொறுப்புகள் எல்லாம் ஆண்டாளிடமே விடப்பட்டன. சுசிக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் உடல் தள்ளாமைக்கும், காலை வெய்யில் முகத்தில் உறைக்கும் வரை பஞ்சாமி தூங்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஆண்டாள் ஒரு பெரும் வரமாய் அமைந்தாள். எனினும், அதுவே ஒரு முறையில் அவமானமாயுமிருந்தது. ஆனால், அத்துடன் சரி தன்மானம் குத்தப்பட்டதன்றி, தூண்டப்படவில்லை. உண்மையில் அவள் பேய்க் சுறுசுறுப்பில் ஒரு போதை தானிருந்தது. இப்படித்தான் என்று கூற முடியாது. மற்றவர்களுடைய பலத்தை அது தான் உறிஞ்சிக்கொண்டு, அவர்களை இன்னும் பலமான மயக்கத்தில் ஆழ்த்தியது.

ஒரு விஷயத்தில் சுசியும் ஆண்டாளிடம் அசெளகரியத்தை அனுபவித்தாள். பொழுது சரியாய்ப் புலருமுன், ஜன்னலுக்கு வெளியே வானத்தில் விடி சாம்பல் பூக்குமுன் வந்து கதவைத் தடதடவெனத் தட்டுவாள், சபித்துக் கொண்டே பஞ்சாமி எழுந்து வருவான்.

‘இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துவரக் கூடாதா ஆண்டாளு?’ என்று சுசி எத்தனையோ விதங்களில் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/109&oldid=1288264" இலிருந்து மீள்விக்கப்பட்டது