பக்கம்:அலைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 O லா. ச. ராமாமிருதம்

 "என்னடா பண்ணே கொழந்தையே?’’

“ஒண்ணுமில்லே பாட்டீ! ஆசையாயிருந்தது, தொட்டாலே ஏன் பாட்டி இதுக்குத் தொட்ட இடம் திட்டா செவக்கறது? அடித்தொடை சதை ரொட்டிமாதிரி மெத்து மெத்துனு சொகம்மாயிருக்கு- -அப்ப்பா-!"

"அடப் பாவீ!’’ கொழந்தையை அப்படியே வாரிண்டேன். அதுக்கு என் மேலே தனி ஆசைதான். கிருஷ்ண விக்ரஹம் மாதிரி கொழு கொழுன்னு. அதன் அம்மாவுக்கு அது போடற கத்தல் காது கேக்காமல் இருக்கணுமேன்னு நேக்குக் கவலை. ஏற்கெனவே கொழந்தை அவள் இடுப்பிலேருந்து எங்கிட்டே தாவறதே அவளுக்கு ஒரு சமயம் போல் ஒரு சமயம் வேண்டியில்லே. ஆனால் அவள் கை வேலையாயிருக்கப்பவும் ஆம்படையானோடே கை கோத்துண்டு சினிமாவுக்குப் போறப்பவும் குழந்தையைப் பார்த்துக்க அகிலா மாமி வேண்டி இருக்கே ஒழிய; குழந்தை தானே கால்சறுக்கு விழுந்தாலும் ‘மாமி தள்ளிவிட்டாளா?'ன்னு கேக்கறதுக்குக் கூசறதில்லை.

இப்போக்கூடப் பயமாயிருக்கு தோட்டத்துலே விளையாடிண்டிருக்குகள். போடற கத்தல் காதைப் பொளியறது. என்னத்தைப் பண்றதுகளோ? எந்தச் செடியைப் புடுங்கி எறியறதுகளோ? எந்தப் பாத்தியைத் திமிதிமின்னு மிதிக்கறதுகளோ? ஆசையாப் போட்டேன். அவரும் சேர்ந்து தோண்டி, நட்டு, தண்ணி பாய்ச்சி இருக்கார். கொஞ்சம் நலுங்கினாலும் எனக்குமேல் அவருக்குக் கண்ணுலே ரத்தம் சொட்டும். அதை நெனைச்சுண்டா பயமாயிருக்கு. ஜகதா ஒரோரு தடவையும் வந்து தங்கிட்டுப் போறவரைக்கும் ஒரோரு நாளையும் இன்னிப் பொழுது போச்சா இன்னிப் பொழுது ஆச்சான்னு எண்ணி எண்ணி மூச்சுவிட வேண்டிதாயிருக்கு,

இன்னிக்கு வரப்பவே அவளுக்கும் அவள் அப்பாவுக்கும் சின்ன தர்க்கம் வந்தூடுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/262&oldid=1286523" இலிருந்து மீள்விக்கப்பட்டது