பக்கம்:அவள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322லா. ச. ராமாமிருதம்



அரைக்கணம் ஒளி மங்கினாள் போலிருந்தது. இருந்தும் இங்குதான் இருப்பேன் என்று முரண்டவில்லை. அப்படிச் சொல்லமாட்டாளா என்று என் மனம் ஏங்கிற்று. ஆனால், அவள் விட்டுக் கொடுக்காமல், 'அப்படியே போய்விடுகிறேன்' என்று விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டாள்.

அம்மாவுக்கு அவள் ஊருக்குப் போகும் காரணம் தெரியாது. எங்களுக்கே தெரியவில்லையே! ஏதோ சாக்குச் சொல்லி அவள் சகோதரனை வரவழைத்தாகி விட்டது. வாசலில் வண்டி நின்றது.

என் அறைக்குள் வந்து நின்றாள். நான் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, மனம் அதில் அழுந்தாது, மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தேன்.  'வருகிறேன்' என்றாள்.

மயிரைப் பளபளக்க அழுந்தவாரி நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும், புருவங்களுக்கும் மத்தியில், குங்குமமிட்டிருந்தாள். பவழமாலை அகஸ்மாத்தாய் மேலாக்கின் வெளியே வந்திருந்தது. உள்ளங்கையிலும், கால்விரல் நகங்களிலும் அம்மா ஆசையுடன் இட்டிருந்த மருதாணி பற்றியிருந்தது. இந்நிமிஷங்கூட தடுத்தால், நின்று விடுவாள்.

"போவதற்கிருக்கிறாய். வருகிறேன் என்கிறாயே?" என்று விகடமாகக் கேட்கலாமா என்று தோன்றிற்று.

"நான் போவது நீ போகச் சொன்னதால் தானே!" என்று கேட்டுவிட்டால்? எப்படி என் தோல்வியை ஒப்புக் கொள்வேன்?

'ஏன் முகம் வெளுத்திருக்கிறது?’ என்றேன்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போ வரும் சோப்பிலேயே சுண்ணாம்பு அளவுக்கு மிஞ்சிக் கலந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/366&oldid=1497928" இலிருந்து மீள்விக்கப்பட்டது