பக்கம்:அலைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் O 149

 கண்ணன் பரீஷையில் 'பெயில்’. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஒரக் கண்ணால் பார்த்தான். வயிறு 'பகீர்’ என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய். வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் "சார், நான் பாஸா?" என்று கேட்டான், தொண்டை பக் பக் பக் பக்-

"பாஸா? பாப்பாஸ்தாள்! நீ எங்கேடா பாஸ் ஆறது? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணின்டிருக்கே! ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு, அடிக்கறத்துக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. 'ஹும்,ன்னா அரையோட போயிண்டுடறே!

"வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை, தட்டுக் கெட்டுப் போறது? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ, அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்..."

அவனுக்கு அதெல்லாம் புரியவில்லை. இப்போ ஒன்று தான் புரிந்தது. அவன் 'பெயில்’.

வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே... நடுமுதுகிலே 'ஐஸ்' வெச்சாப் போலே சில்லுன்னு அப்புறமும் கீழே இறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை சாட்டையிலே இருவத்தியெட்டு அடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம்-அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா... அன்னிக்குக்கூட அப்படித்தான். அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே, அன்னிக்கு...

அ.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/151&oldid=1288538" இலிருந்து மீள்விக்கப்பட்டது