பக்கம்:அவள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 லா. ச. ராமாமிருதம்

ளுடைய தனி உரிமையென்று நான் சொல்லவில்லை. அவரவர் வேளை நேர்கையில், அவரவர் பக்குவ நிலைக்கேற்றபடி எல்லாருக்கும் இது உண்டே!"

என் தனிமையில் அவர் கூற்றை மேலும் சிந்தித்தேன்.

Innocence; இதற்கு நேர்த் தமிழ்-நிஷ்களங்கம்! நிரபராதித்வம்!! அப்பாவித்தனம்!!! ஊ...ஹூம். திருப்தியாயில்லை. அனந்தநாராயணன் குறித்தது குழந்தை நிலையையா? ஆப்பிளைப் புசிக்கு முன் ஆதாம் ஏவாளின் தன்மையையா? விளக்குச் சுடரில் பார்வை நிலைக்குமுன் குழந்தை நிலையையா? படத்தில், ராமகிருஷ்ணரின் அரைக்கண் செருகலில் அந்தப் பார்வையைச் சந்திக்கிறேன். எதிலுமே குறியிலாத பார்வை.

சிந்திக்கச் சிந்திக்க அந்த அனுமான மண்டலம் அச்சத்தைத்தான் தருகிறது. அங்கே ஒரு 'வெறிச்' இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் அர்த்தமுள்ள 'வெறிச்', 'ப்ளாங்' ஸ்லேட், ப்ரக்ஞை ஸ்திதி. சூன்யமன்று, பூஜ்யம். எல்லாம் உள் அடங்கிய பூஜ்யம். தன்னந்தனிமை. சிருஷ்டியே அங்கிருந்துதான் ஆரம்பிக்க முடியும். அங்கிருந்துதான், என் வழிமுறை முன்னோர்களை, பரம்பரை முதல்வனையே, பார்க்காமலே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

எழுத்தில் என் ஸாதகம் ஆரம்பித்த நாள் முதல் - ஏன், இன்று வரையிலும்தான், எனக்கு ஓர் எண்ணம் உண்டு. ஸாதகம் முற்ற முற்ற அவசிய, அனாவசியத்தின் பாகுபாடுகள் தேறத் தேற, அந்தத் தீர்வையின் விளைவாய், எழுத்து குறுகி, இன்னமும் குறுகி, கடைசியாக அறவே மறைந்துபோய், புரட்டும் ஏடுகள் பார்க்கக் காலி; ஆனால் பூரா எழுத்தின் சக்தியின் விறுவிறுப்பு.

என்ன அசட்டுத்தனமான சபலம்! வெளியில் சொல்லக் கூட வெட்கக்கேடு என்று படுகிறது. ஆனால் நிஜமாகவே முட்டாள்தனம்தானா? என்கிற சந்தேகமும் நசுவலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/70&oldid=1496273" இலிருந்து மீள்விக்கப்பட்டது