பக்கம்:அவள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332லா. ச. ராமாமிருதம்



படுத்ததிலிருந்து அந்த வாயினின்று ஒரு முனகல்கூட எழவில்லை. மிருகம்போலவே நோயை மெளனமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள். கூந்தல் கட்டிலிலிருந்து படுதாப்போலிறங்கி வீழ்ந்து முகம் கண்ணாடிபோல் ஒரேயடியாய்த் தெளிந்து போயிருந்தது.

அம்மா எழுந்து வந்து மருமகள் நெற்றியில் விபூதியையிட்டாள். என்னை, 'நீ போய் படுத்துக்கொள்' என்றாள். நான் சின்னக் குழந்தையைப்போல் பேசாமல், ரேழித் திண்ணையில் படுத்துக்கொண்டேன்.

மணி ஒன்று, ரெண்டு, மூணு, நாலு.

'அம்பீ!'

அடி வயிற்றில், நெருப்பை அப்படியே கொட்டிற்று. அதே சமயம், வாசலில் டாக்டரின் காரும் வந்து நின்றது. இருவரும் சோந்து உள்ளே போனோம்.

அரைக் கண்ணாயிருந்த இமைகள் முழுவதும் மூடிவிட்டன. டாக்டர் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது.

'ஜயம் ஸார்! கண்டம் தப்பித்தது ஸார்!"

அம்மா ஏதோ பேச முயன்று கையைத் தூக்கி ஜாடை காட்டினாள். வாய் திறந்து திறந்து கண்கள் பெருகின. சுவாமி பிறையண்டை போய் தடாலென்று விழுந்து விட்டாள்.

அது நினைவிருக்கிறது.

உடம்பு படிப்படியாய்த் தேறி வந்தது. அம்மா கைராசியிலும், அம்மா போடும் பத்தியத்திலும், அம்மா பண்ணும் சம்ரக்ஷணையிலும் உயிரற்றதுகூட உயிர் பெற்றுவிடும். அப்படித்தானே ஆயிற்று!

எழுந்து நடமாட மாதமாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/376&oldid=1497910" இலிருந்து மீள்விக்கப்பட்டது