பக்கம்:அவள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 லா. ச. ராமாமிருதம்


"நீங்கள் கலியாணமானவர். உங்களுக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறது.”

"இந்தத் தகவல்கள், நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலே பேசிக்கொண்டிருக்க, நீ எனக்கு வகுத்த யோக்யதைகளா?”

"இல்லை, நம் பேச்சின் உறவு அதன் வரம்பு மீறாமலிருக்க அத்துக்கள்.”

"ஸுநாதனி, எத்தனை நாள் இப்படியே ஒடும்?”

"இன்றைக்கு இரண்டாம் நாள்."

"இந்த விக்ரமாதித்தன் சிம்மாஸனத்திற்கு இம்மாதிரி இன்னும் எத்தனை படிகள்?"

"உங்களுக்கு அலுப்பு வரும்படிப் பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.”

"இது சிறுபிள்ளைத்தனமாய் இருக்கிறது. நாம் இன்னும் சொப்பு வைத்தா விளையாடிக்கொண்டிருக்கிறோம்?"

"உங்களுக்குக் கோபம் வருகிறது. ஆண்களே இப்படித்தான். நான்-நான் இவ்வளவு தைரியமாய், வெட்கம் கெட்டு, உங்கள் முன்னிலையில் பேச முடியுமா? என்னதான் வெளிச்சமாயிருந்தாலும், ஆண் பார்வை என்மேல் படுகையில், கூச்சம் குறுக்கிட்டுவிடாதா? ஆத்ம நிர்வாணத்தைப் புலன்களால் புரிந்துகொள்ள முடியாது. அதையும் உடலின் ஆடையுரிப்பாய்த்தான் கண்ணுக்குக் காணத் தெரியும்.”

"வெட்கம் கெட்டதாய்த்தான் மனத்திற்கு நினைக்க முடியும்."

"எனக்கென்னவோ இந்த நிலையில் பொய்ம்மை தான் தெரிகிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/294&oldid=1497617" இலிருந்து மீள்விக்கப்பட்டது