பக்கம்:அவள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 357


"குழந்தை, நீ உறவு கொண்டாடச்சே, எனக்கு உன்னைப் பெத்த சந்தோஷமே. வரது."

"ஏம்மா, பெத்தால்தான் உறவா? பாவனைதான் உறவு, ரெண்டுபேரும் சேர்ந்து நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்."

"பண்ணடி கண்ணே, மகராஜியாயிரு."

அவர் கண்கள் பயத்தில் சுழன்றன. தடுக்க முயன்ற கைகளைச் சிரமப்பட்டு, பின்னுக்கு இழுத்துக்கொண்டார்.

நமஸ்கரிப்பில் குனிந்த அவள் முகம் நிமிர்கையில், கூடத்து ஜன்னல் வழிவெயில் பட்டு, முகமே சிவப்பாய் ஏற்றிக்கொண்டது.

ஜ்வாலாமுகி.

அகிலா கண்களைக் கசக்கிக்கொண்டாள். ஊஹாம் ஒன்றுமில்லையே. அந்தப் பெண் எழுந்து நின்றுகொண் டிருந்தாள்: "நீங்கள் இப்படி வாழ்த்தி வாழ்த்தித்தான் நான் வயசுக்குமீறிக் குதிரையா வளர்ந்துட்டேன்.” 'ஹும்—மூக்கைச் சுருக்கிக்கொண்டாள். "கம்முனு வாசனை! அப்பா பசிக்குது."

அடுப்பு மேடை மீது இறக்கி வைத்திருந்த வெண்கலப் பானையின்மேல் தட்டை எடுத்தவுடன்,

"ஆ, சக்கரைப் பொங்கல்! எனக்கு உசிராச்சே! அம்மா, அத்தனையும் எனக்குத்தானே?"

"ஆமாண்டி செல்லம், உனக்கேதான். வெள்ளிக் கிழமை, பெளர்ணமியாச்சே! நைவேத்யத்துக்குப் பொங்கல் வெச்சேன். அப்பா ஸ்நானம் பண்ணிண்டிருக்கார். நிமிஷமாகக் கோவில் பூஜை பண்ணிட்டு வந்துடுவா—ஆ—என்னடி பண்ணறே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/401&oldid=1497209" இலிருந்து மீள்விக்கப்பட்டது