பக்கம்:அவள்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438 லா. ச. ராமாமிருதம்

மாமாவுடன் அவளே—ஏன், அத்தையும் கூடத்தான்—காரணம் இல்லாது பேசுவதில்லை. காரணம். நேராமலே பேச்சு தானே நின்றுவிட்டது. கேட்டால் கேட்டதற்குப் பதில் மனுஷனுக்கு இப்போதெல்லாம் திடீர் திடீரென வரும் கோபங்களுக்கும், உடனே அந்தக் கோபம் மாறும் சிரிப்புக்கும் வேளையும் காரணமும் நிர்ணயிக்க முடிவதில்லை. அத்தைக்கே விளங்குவதில்லை. அம்மாதிரி சமயங்களில் புன்சிரிப்பில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, மேல் சஞ்சாரத்தில் சாரீரம் தோற்ற சங்கீத வித்வான் போன்று கையை உயரத் தூக்கிவிடுவாள்.

அத்துடன் மாமாவுக்கு காணாததைக் கண்டதுபோல ஏன் இந்த ஆவலாதி? பரக்கப்பரக்க, சுடச்சுட, இந்தத் தாடையில் ஒரு அதுக்கல், அந்தத் தாடைக்கு ஒரு தள்ளு, உடனே 'கபக்—ஈசுவரா, மோர்க்குழம்பில் சேப்பங் கிழங்கு தொண்டையில் அடைக்காமல் இருக்கணுமே, என்னதான் மாவாய் வேக வெச்சிருந்தாலும், அத்தைக்கு சிரமமில்லாமல் இருக்கணுமேன்னு!

"ஊம்—ஊம்—ரஸம்! ரஸம்!! கலத்தைப் பார்த்துப் பரிமாறுங்கோளேன்!”

பிள்ளையைப் பார்த்து:

“என்னடா, நான் எழுந்திருக்கப்போறேன், நீ இன்னும் பருப்பு தாண்டல்லையா? சாதம் சாப்பிடறையா, பூத்தொடுக்கறையா?”

அவளுக்கே தோன்றுகிறது. இலைச்சாதத்தைக் கையில் எடுத்துக் கொடுக்கலாமா, வாயிலேயே ஊட்டி விடலாமா?

"அ—ஆ அம்!"

அத்தை சொன்னது இதுதானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/482&oldid=1497694" இலிருந்து மீள்விக்கப்பட்டது