பக்கம்:அஞ்சலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 69

லக்ஷ்மி எரிமலைபோல் சீறினாள்.

“இரக்கமும் தயையும் எனக்கு வேண்டாம்—” அவளுடைய திடீர் உக்ரத்தைக் கண்டு அப்பா பயந்து பின்னடைந்தார்.

“என்ன லட்சுமி இப்போ—?”

“உங்கள் வழியெல்லாம் எனக்குத் தெரியாதா? ஏதோ ரெண்டு காசைக் கூட வீசி எறியறதுதானே, உங்கள் வழி, ஏதோ உங்கள் கிட்டேயிருக்குன்னு! போங்கோ அப்பா இங்கே விட்டுப் போயிடுங்கோ! அம்பி, அப்பாவை வெளியே போகச் சொல்.

வெகுநேரம் கழித்து அறையுள் நான் மறுபடி போக நேர்ந்தபோது, இருட்டிக் கிடந்தது. விளக்கைப் போட்டேன். ஜன்னல் விளிம்பின்மேல் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதுங்கிய மிருகம்போல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்களில் மங்கிய தணல்கள் நகநகத்துக் கொண்டிருந்தன.

நான் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.

“லக்ஷ்மி!”

அவள் தலை நிமிர்ந்தது. பார்வையில் என்னை அடையாளம் கண்டுகொண்ட சோடையில்லை. அந்நியனைப் பார்ப்பதுபோல் இருந்தது.

“அம்பி,என் விஷயத்தில் நீ எவ்வளவு கெட்டவனாய் வேணுமானாலும் இருந்துக்கோ.ஆனால் என் மேல் உனக்கு இருக்கும் இரக்கத்தினால், அதற்காக என் மேல் பிரியமாயிருக்காதே. அது மாத்திரம் என்னால் ஸகிக்க முடியாது. கழுத்தில் கல்லைக் கட்டிண்டு கொல்லை கிணற்றில் இறங்கிடுவேன்.இது சத்தியம்— ஆமாம். சத்—”

“லக்ஷ்மீ!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/79&oldid=1054039" இலிருந்து மீள்விக்கப்பட்டது