பக்கம்:அஞ்சலி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242 லா. ச. ராமாமிருதம்

அடைத்த கதவையிடிப்பதுபோல், இமைகளைப் பல வந்தமாய்ப் பிரித்தான்.

அவை சுளுவாவே பிரிந்தன. வீணா பயமுறுத்தினாளே என்று அவள்மேல் கோபம்கூட வந்தது. இமைகள் முழுக்கத் திறந்ததும், வேதா அலறினான்.

கண்களில் வெள்ளை விழி வெறிச்சிட்டிருந்தது; கரு விழி காணோம்.

“விழிமேல் மெதுவாய் ஊது. புருவ நடுவை அமிழ்த்தி வருடு—ஆ, அப்படித்தான்!”

“அம்மாடி! ஏகா ஒரு நிமிஷத்தில் கெடுபிடி பண்ணி விட்டையே!”

அவள் கண்களில் ஆயிரம் அடையாளங்கள் தவித்தன. அவனுக்குத் திடீரென்று அர்த்தமற்ற விபரீதமான சந்தேகம், குளத்தில் காலைக் குத்தும் மீன்போல், நினைவைப் பிராண்டிற்று.

இது ஏகாதானா? எப்படியென்று தெரியாமலே, கணத்திற்கும் யுகத்திற்கும் இடைவேளையைக் கால் வாரி விட்டாற்போல்—இது யார்?

அவன் கண்கள் அவள் முகத்தாடும் நிழல்களைத் தொடர்ந்தன. அவள் பார்வை கும்மட்டியைச் சிந்தித்திருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டான், இந்த அனல் நிறமே நெருப்பு மாதிரியில்லை. ஆனால் எப்படி மாறியிருந்தது என்று சொல்லத் தெரியவில்லை. இது என்னைச் சுடும், இவளைச் சுடாது! இதென்ன விந்தை? என்ன பிதற்றல்!

“இதை நான் பற்றவைக்கவில்லை” என்றாள். “இது தானே பற்றிக்கொண்ட நெருப்பு. என் உடலிலிருந்து வந்த நெருப்பு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/252&oldid=1033530" இலிருந்து மீள்விக்கப்பட்டது