பக்கம்:அலைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 O லா. ச. ராமாமிருதம்



எல்லாம் ஏற்பாடாத்தான் நடக்குது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செஞ்சேன்?

தலைக்கு மேலே முழு மைதானத்துலே முக்கா நிலவு நடுவுலே நின்னிட்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். "ஏலே பண்டாரம்! இன்னிக்கு உனக்கு என்ன வாழ்வு வந்திருக்குது? தண்ணியும் சோறும் விரலிடுக்குலே வழிஞ்சு போவுதேன்னு உஸ்உஸ்ஸுனு அவசர அவசரமா உறிஞ்சி உறிஞ்சி அரையும் முழுசுமா உள்ளே தள்ள கிடைச்சாலே சொர்க்கம் உனக்கு. இன்னிக்கி எல்லாருக்கும் சரியா இலை, மனை, பக்கத்துலே லோட்டாவுலே தண்ணி, விருந்து, ஊம் ஊம் நடத்து ஏக் தின்கா சுல்தான்! ஆனால் ஒரு நாள் ஒருவேளை முழு வவுறு நிறையப்போகும் சொகத்துலே நாய்க்கு வெக்க மறந்துடாதே. இலையைப் புரட்டி ஒண்ணும் காணாமே அது வவுறெரிஞ்சு நடு ராவுலே தலை தூக்கி என்னைப் பார்த்து ஊளையிட்டா, உன் வவுத்துலே பத்து நாளைக்கு மண்ணு! ஆமா சொல்லிட்டேன், இன்னிக்கி உன் சோறுக்கு நான் சாஷி-" கிலியிலே தலையை ஆட்டறேன்.

நிலவின் அழகை எல்லாரும் புகழாறாங்க. ஆனா எனக்கு அவன் அழகா பட்டதில்லே. முகத்தில் கிழவனாட்டம் எத்தினி வடு மத்த நாளைக்கு தேஞ்சு தேஞ்சு ஒஞ்சு ஒருநாள் மாஞ்சே போறான். பசிச்ச வயிறோடு ராவுலே மானம் பார்த்து படுக்கற முகம் உலகத்திலே எத்தினி எத்தினியோ? பார்த்துப் பார்த்து அந்தப் பாவமே அவனை ரோகமா வாட்டுது.

சூரியன் விசயம் கேக்கவே தேவையில்லே; பகலிலேயே எரியற வயிறு கோடி கோடி கண்டு கண்டு, அவன் கொதிப்பு கூடிக்கிட்டே போவுது.

இலையிலே பதார்த்தம் நிறைஞ்சுபோச்சு.

மசாலா பொரியல்.

துவையல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/166&oldid=1288553" இலிருந்து மீள்விக்கப்பட்டது