பக்கம்:அலைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 O லா. ச. ராமாமிருதம்



எங்கேயிருக்கிறேன்? சிவகாமு, நீ வேறு நான் வேறு, நீயுமில்லை, நானுமில்லை. ஸ்ருதி பிறப்பித்துப் பிரிந்த பேதங்கள் மறுபடியும் கூடிய ஒன்று. மறுபடியும் ஒன்றிலிருந்து, நூறு, ஆயிரம், ஒன்றின் லக்கத்தின் பக்கத்தில், விழி விழியாய்ச் சுழித்த எத்தனையோ சுழிகள், ஒவ்வொன்றாய், உடன் உடனே அடுக்கடுக்காய் விழிக்கையில், அலைகளின் விளிம்பிலிருந்து நான் விழுந்தேனா, நீ பின்னிருந்து தள்ளினாயோ, முன்னிருந்தே, கைப்பற்றியோ, கால்வாரியோ இழுத்துவிட்டாயோ? நான் உள் அமிழ்ந்துகொண்டே போகும் ஆழத்தின் சுழிப்பில், என் உயிரின் வெறும் தாது வாய் என் உள் ப்ரக்ஞை மாத்திரம், தன் வியாபக பூரனத்தில் அடித்துக் கொள்கின்றது. சிவகாமூ, இந்நிலையை ஆத்மாவின் ராஸ்க்ரீடையை கரையிலிருந்தாலும் சரி, கடலிலிருந்தாலும் சரி, உனக்குப் புரியச் சொல்ல எப்படி என்னால் ஆகும்?

அட, உனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டியது என்ன?

இந்தச் சமயத்தின் பக்குவத்தில், என் இதயத்தில் அன்பு பொங்குகிறது. யார்மேல், என்னால் குறித்துச் சொல்ல இயலாது. காலமும் இடமும் உருவமும் என் ப்ரக்ஞையின் இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கும் இந்நேரத்தில், தன்னையே ஒருபெரும் இதயமாய்க் காண்கிறேன். அது சுரக்கும் அன்பில் என் ரத்தம் எல்லாம் பாலாய்மாறி இதயம் நிரம்பி வழிந்து, தன்னைச் சுற்றிப் பாலருவிகள் கிளையோடி, ஒன்றி ஈரருவி ஒரருவி, ஒரருவி பேரருவி, பேரருவி பாற்கடலாய்ப் பரவிவிட்டது. அலை கக்குவது அலைநுரையன்று; அன்பு வெள்ளத்திள் பால்நுரை இவை அலைகளல்ல, உள்ளத்தின் நெகிழ்ச்சிகள்: ஆத்மபரவசத்தில் ஆங்காங்கே ப்ரஞையின் விம்மல்கள்.

நிழலுக்குச் சட்டென சாளரத்தை இழுத்தாற்போல், கண் இமைகள் என்மேல் பாதி கவிந்துவிட்டன. இந்த நிலையின் பாதையில் அரைக்கண்தான் முழுக்கண்ணோ? அரைக் கண்ணின் நிழலும் முழுவிழிப்பின் ஒளியாலுமாய் நினை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/214&oldid=1285552" இலிருந்து மீள்விக்கப்பட்டது