பக்கம்:அலைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 101



வயணமான சாப்பாட்டுக்கும் வண்ணான் மடிக்குமே ஒரு தனி உற்சாகமுண்டு. சோற்றுத் திமிர். துணிக் கொழுப்பு.

"அடேப்பா! ஒண்ணா, இரண்டா? எட்டு, மனுஷனிடம் ஒரு முழம் கயிற்றுக்குக் காசிருந்தால் எப்பவோ தொங்கியிருப்பான். எங்கேயிருக்கும்? அஷ்டலஷ்மிகளும் ஒரே இடத்தில் வந்து தங்கினால், இடம் கனம் தாங்குமா? கப்பல் தட்டு கவிழ்ந்து எல்லாம் தலைகீழாப் போச்சு? கையிருப்பெல்லாம் கடனாக மாறிப்போச்சு."

அவ்வளவுதான். சுசி மூக்கைச் சிந்திப்போட ஆரம்பித்து விட்டாள். பஞ்சாமி சொக்காய்ப் பொத்தானைத் திருகிக் கொண்டே சிந்தித்துக்கொண்டு போய்விட்டான்.

நீ அளுவாதே அம்மா. ஐயா சொபாவம் புதுஸ்லா. அவருக்கு உன் அளுகையிலே சிரிப்பு காணறதே கண்ணாப் போச்சு. புள்ளத்தாச்சியாச்சேன்னு மனுசனுக்கு இரக்கம் இருக்குதா பாரேன்."”

தேற்ற ஆளிருந்தால் அழக் கேட்கணுமா? சுசி பெருங்குரல் எடுத்தாள்.

"அட சும்மாயிரும்மா, இந்த பொண்ணா, புள்ளையா தகறாரெல்லாம் வவுத்துலே இருக்கிற வரைக்கும்தானே! இடுப்பு தோவு எடுக்கட்டும். ஏதோ ஒண்ணு களிஞ்சா சரின்னு ஐயாவுக்கே ஆயிடும். இந்தக் கிண்டல் எல்லாம் கொள்ளுச் சுண்டலாப்பூடும்! அட போ நீ ஒண்ணு! கொளந்தையை ஏந்திட்டு வண்டிவிட்டு இறங்கினதுமே, ஆலத்தி கரைச்சு வெச்சுகிட்டு நான்தானே காத்திட்டு நிப்பேன்? எங்கிட்டேதானே பையனைக் கொடுத்து வாங்கப் போறே! அட, பையனனுதான் வாயிலே வருது, உனக்குப் பையன் தான் போ!-"

"ஆண்டாளு, நீ இல்லாட்டா இந்த வீட்டில் என்பாடு அதோகதி தாண்டி! நீ என் உடன்பிறப்பு மாதிரி."

ம்-?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/103&oldid=1288258" இலிருந்து மீள்விக்கப்பட்டது