பக்கம்:அவள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23 லா. ச. ராமாமிருதம்

(ஆசிரியர்: ராமகோடீஸ்வர ராவ்) கண்ட இந்த அற்புதமான குறள், நினைவில் இன்னமும் கொடி சுற்றிக்கொண்டிருக்கிறது.

தோல்விக்கும் வெற்றிக்கும் அளவுகோல் எது? தரமானி என்ன?

தோல்வியும் வெற்றியும் வாழ்க்கையின் ஊஞ்சல் வீச்சின் இருமுனைகள். வீச்சுக்கேற்ப முனைகள், அவ்வப் போது மாறிக்கொண்டேயிருக்கும். பிறந்துவிட்டால் வாழாமல் முடியாது. வாழ்வதற்குத்தான் பிறவி.

இரண்டுமே மனநிலைகள்தாம் என்பது மறுக்க முடியாத வாதம். ஆனால் இதை உணர்வதற்கு, உணர்ந்த பின், உணர்ந்ததை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும். அதற்கு மனதைச் சமைக்கும் சந்தர்ப்பங்களுக்கும் பங்குண்டு என்றாலும் கூடவே, விழிப்பும் தன்னம்பிக்கையும் 'தயார்' உம் பழகாது சாத்யமாகாது. நம்பிக்கை - ஆ!

The wisdom of India. Asia and China (எழுதியது Lin you Tang) சொல்கிறது.

"கடவுள் முதலில் தன்னைப் படைத்துக்கொண்டு, பிறகு உலகைப் (உலகங்களை) படைத்தார். (இந்த வாக்கு நம் வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டது. அதையும் இன்றைய பாமரர் - நாம் பிறர் மூலம்தானே தெரிந்து கொள்கிறோம்!)

கடவுள் எனும் தனிநிலைக்கும் முன்னிலை பிரம்மம் என்று சொல்கிறோம். இந்த நீண்ட காலம் எழுத்துடன் பழகி, அது எனக்குத் தந்த பாஷையில் பிரக்ஞை என்கிறேன். ப்ரக்ஞைக்கும் முன் நிலை? எனக்கு அனுமான சக்தி இதற்குமேல் எட்டவில்லை. தோற்றுப்போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/72&oldid=1496281" இலிருந்து மீள்விக்கப்பட்டது