பக்கம்:அவள்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 501

என்னை மன்னிச்சுக்கோங்கோ, தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை, நானும் நீயும் எனும் இந்த ஆதாரத்தை ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம் எனக்கு. இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் எழுத வந்ததுகூட மறந்துவிடுகிறது.

ஆனால், நானும் நீங்களும் என்று எல்லாம் எண்ணவும் எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை எங்கே ஒதுக்கிவைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு க்ஷீராப்தி. அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாகிறது, குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால்தானே எனக்குக் கிட்டினர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்து தான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில் தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்.

எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துள்ளேயே மறைந்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றமான சாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்ட பின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்ரி கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் நானே உடுத்திக் கொண்டுவிட்டால் என்ன? பொம்மனாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக நானே! நீங்கள்தான் இல்லையே. எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/545&oldid=1497356" இலிருந்து மீள்விக்கப்பட்டது