பக்கம்:அவள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384 லா. ச. ராமாமிருதம்

முழங்கால்களைக் கட்டியபடி, அவள் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வயது முப்பது, முப்பத்திரண்டு இருக்கலாமா? முகம் அப்படி அழகில் சேர்த்தியில்லை. ஆனால் பெரிய பேரீச்சம்பழ விழிகள். படு ஒல்லி. வயதாகிவிட்டாற் போல் வாய் வார்ப்பில் க டு ப் பு. சலித்துப்போன அவயவங்கள். நெற்றியில் ஒன்றும் காணோம் ஆனால் இந்நாளில் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்ல முடியாது. நீண்டு அடர்ந்த கூந்தலினின்று, தடித்த பிரிகள் இரண்டு, காற்றில் நெற்றிப் பொட்டில், நெற்றியில் ரோஷமாய் ஒன்றையொன்று துரத்தின.

இருவரும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவள் பேச முன்வரவில்லை. முன்வருபவளாயில்லை.

அவளும் என்னைக் கணித்துக்கொண்டிருப்பாள் கண் என்மேல் இல்லாவிட்டாலும். அந்த சாமர்த்தியம் அவாளுக்குத்தான் உண்டு.

கடல் விளிம்பில் தொடுவானத்தில் புகை மண்டலம். கப்பல் உள்ளே வருகிறதா? வெளியே போகிறதா?

இதுவரை கப்பலில் பிரயாணம் செய்ததில்லை. இனி மேல் எங்கே போகப்போகிறேன்? முதலில் போக்கிடம் ஏது? ஆனால் காயிதக் கப்பல்கள் எத்தனை விட்டிருக்கிறேன்! வாய்க்கால் கரையோரம், சிறுவனாய்க் கவிழ்ந்து படுத்து, என் கப்பல்கள் எத்தனை கவிழ்ந்திருக்கின்றன! வாய்க்காலின் சிற்றலைகூடத் தாங்காது மூழ்கியிருக்கின்றன: மழையில் நனைந்த சிட்டுக்குருவிகள்! பொலிவிழந்து, சலித்து, மூழ்கிவிட்டாலே தேவலை என்கிற வகையில் தண்ணிரில் தவித்துக்கொண்டு...ஹும், இப்போது விடுவதற்கு என்னிடம காயிதக் கப்பல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/428&oldid=1497294" இலிருந்து மீள்விக்கப்பட்டது