பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142சீவக சிந்தாமணி



நாளை வருவாய் என்று நாள்பல கடத்தினேன்; ‘நாளை என்பது ஏன் வருவதே இல்லை’ என்று கேட்கும் வினாவுக்கு இதுவரை விடைசொல்ல இயலவில்லை.

புதிது; புதிது கிளைப்பது மரத்துக்கு அழகுதான்; என்றாலும் கிளைத்துக் கொண்டே போனால் அடிமரம் இளைத்துப் போகும். அதனால் சுமக்க இயலாது.

இந்த அடிமரம் தாங்கள்தான்; கடமையை முடிக்கக் கடுக வந்து ஆவன செய்க, அதுதான் யான் வேண்டுவது; வணக்கம்” என்று எழுதி முடித்து இருந்தாள்.

கலையரசியின் விலையில்லா மாணிக்கத்தைக் கண்டு அதன் ஒளியில் தன் எதிர் காலத்தில் நாட்டம் காட்டி விரைவில் வீடு திரும்ப விழைந்தான்; சாதிக்க வேண்டியவை அவனுக்காகக் காத்துக் கிடந்தன.

நாட்டைக் கொள்ளையடிக்கச் சிற்றரசர் வந்து வளைத்துக் கொண்டதாக ஒரு செய்தி வந்தது; நந்தட்டனை அழைத்துக்கொண்டு போர்முனை சென்றான்.

எதிரே பதுமுகன் புத்திசேனன் மற்றும் அவன் தோழர்கள் இவனுக்கு எதிரிகளாக நின்றனர்; இவன் காலடியில் அம்பு ஒன்று அது வணங்கியது.

“நாட்டு அரசன் ஏமாங்கத இளைஞன் சீவகன் காண்க” என்று ஒலை ஒன்று அதனோடு ஒட்டிக் கிடந்தது. ‘பதுமுகன்’ என்று அவன் பெயர் அம்பில் பொறிக்கப்பட்டு இருந்தது. வெள்ளைக் கொடியை உயர்த்தி அவன் தோழர்கள் அமைதி விரும்புவதை அறிவித்தனர்.

ஏன் இவர்கள் நாடகப் பாங்கில் நடந்து கொண்டனர் என்பது விளங்கவில்லை.

“நேரே சொல்லிவிட்டு வந்திருக்கலாமே” என்று வினாவினான்.