பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் இலக்கியக் கதைகள்

வாசலோடு கூடிய மனிதரில்லையே அவர்! மேலும் அவருடைய மன நிலையையும் வாழ்க்கையையும் பொறுத்தவரை காலுக்குச் செருப்பும், கைக்குக் குடையும் யாராவது வற்புறுத்தி அவரிடம் அளித்தால்கூட அவருக்கு அவை அநாவசியமே.'சுமந்து திரிகின்ற உடலின் சுமை போதாதென்று தோற்செருப்பையும் துணிக் குடையையும் சுமந்து கொண்டு வேறு திரிய வேண்டுமா? என்று எண்ணுகிற அளவிற்கு விநோதமானது அவருடைய மனோபாவம். அவர் விந்தை மனிதர். ‘இப்படிப்பட்டவர் என்று வரையறை செய்து கணங்களைச் சித்திரித்து விட முடியாதவர். வெளிப் பார்வைக்குப் பைத்தியக்காரர், பைத்தியக்காரத்தனம் என்று உலகம் அவரையும் அவர் குணங்களையும் பற்றி முடிவு செய்து கொண்டால் அது அவருடைய குற்றமில்லை. சீறி வசை பாடுவார் சில சமயங்களில், பெட்டிப் பாம்பாக ஒடுங்கி விடுவார் வேறுசில சந்தர்ப்பங்களில், இந்த இரண்டு மாறுபட்ட நிலைகள் மட்டுமல்ல. இன்னும் நமது அறிவிற்கு அப்பாற்பட்ட விளங்கிக்கொள்ள முடியாத எவ்வளவோ இயல்புகளை விசித்திர ரீதியாகவும் சரி, வேதாந்த ரீதியாகவும் சரி, அவரிடம் காணலாம். அதெல்லாம் அவருக்குச் சாதாரண வாழ்க்கை.

சோறும் நீரும் துணியும் காணாத துயரம் அதிலே இருப்பது போல, இருந்தது போல நாம் மயங்கி எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அந்த வேடிக்கை மனிதருடைய வாழ்க்கையை ஊன்றி ஆராய்ந்தபின் உணர்ந்து பார்த்தால், அப்படி எவற்றையுமே அவராக உணர்ந்து துன்பப்பட்டதாகத் தெரியக் காணோம். அந்த உணர்வுகூட அங்கே நிழலிடவில்லை.

தாகம் நாவை வறளச் செய்தது. காளமேகம் அந்தத் தளர்ச்சியோடு தளர்ச்சியாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் சகிக்க முடியாத வெய்யில் வேதனையில் எவ்வளவு நேரந்தான் தாகத்தைத் தாங்கிக் கொண்டு நடக்க முடியும்? கால்களும் தலையும் வெய்யிலில் வாடி வருந்தும் போது தாகம் வேறு பற்றிக் கொண்டால் கேட்கவா வேண்டும்? -

இந்த நிலையில் அவரைப்போலவே அந்தவெய்யிலில் வந்து கொண்டிருந்த வேறோர் ‘மானிட ஜீவன்’ அவர் திருஷ்டியில்