பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24சீவக சிந்தாமணி



பட்டனர். தம்பியரும் தோழர்களும் அறிவு மிக்க அமைச்ச ராகவும், செயலாற்றும் வீரர்களாகவும் செயல்பட்டனர். வேளைக்குச் சோறு, துணிமணிகள்; அடிதடி, நாளைக்கு ஒரு நாடகம்; கவலையில்லாத கட்டவிழ்ந்த வாழ்வு இவர்களைக் கவ்வியது.

இராசமாபுரத்தில் பேசுவதற்கும், பேசிச் சிந்திப்ப தற்கும், சிந்தித்துச் செயல்படுவதற்கும் அவ்வப்பொழுது ஏதோ சில நிகழ்ச்சிகள் தோன்றாமல் இல்லை. தோட்டத்துக்குக் காவல் இல்லையென்றால் பூப்பறிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்; காய்த்து முதிர்ந்த கனிகளைப் பறித்துச் சென்றால் தடுத்து நிறுத்த ஆள் இல்லாத அலங்கோல ஆட்சியாகக் கட்டியங்காரன் ஆட்சி இருந்தது.

கொள்ளையடித்துக் குட்டி அரசு நடத்தும் வேடுவர்கள் சிலர் இந்த இராசமாபுரத்தைச் சூழ்ந்தனர்; நகரின் புறப்பகுதிகளில் காட்டில் புல்லை மேய்வதற்கு ஊர் எல்லை கடந்து இடையர்கள் தம் மாடுகளை ஒட்டிச் சென்றனர். வேடுவரை எதிர்க்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. அந்த மாடுகளை அவ்வேடுவர்கள் வளைத்துக் கொண்டனர். போரில் இளைத்து ஊர் திரும்பியவர்கள் அப்பசுக்களின் உரியவரிடம் வந்து செய்தி அறிவித்தனர். வீட்டுக்கு வரும் ஆநிரைகளை எதிர்பார்த்துக் குரல் கொடுத்து ஏங்கும் கன்றுகளை வீட்டு மகளிர் கட்டிக் கொண்டு அழுது ஆறுதல் கூறினர்.

பசுவை இழந்த இடையர் அரசனிடம் சென்று அவன் கடை வாயிலில் நின்று முறையிட்டனர்; குறை கேட்டவன் படைகளை அனுப்பி நிரை மீட்டு வருக என்று ஆணையிட்டான். அவன் மைத்துனன் மதனன் தலைமையில் அரசனின் படை வீரர்கள் திரண்டு சென்றனர். முரட்டு வேடுவர்களை விரட்டி அடிக்க முடியாமல் அவரவர் தம் உயிரைப் பெரிதாக மதித்து உடம்புக்கு ஊறு இன்றி ஊர் திரும்பினர்.