பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112சீவக சிந்தாமணி



அவனுக்குப் பொழுது போக்க அந்தச் சோலையில் மிகுதியும் பயன்பட்டது.

அவனைத் தேடிக்கொண்டு யாரோ “மச்சானைப் பார்த்தீர்களா” என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தார்கள். இந்த மலைவாழைத் தோப்பில் தன்னைத் தேடுவார் யார் என்று கவனித்தான். உண்மையிலேயே மச்சான் ஆகக் கூடிய உலோகபாலன் அங்கு வந்து சேர்ந்தான். அச்சம் சிறிது அலைக்கழித்தது. தமிழ்க்காதல் என்ற நூல் சிறிது மறைத்து வைத்தான்.

“என்ன நூல்?” என்று கேட்டான். “தமிழ்க் காதல்”; என்றான்.

“தமிழ்க்காதல் என்றால் எனக்குக் காட்டக்கூடாதா? ஏன் எனக்கு அதை மறைக்கிறாய்?”

“எதுவரை படித்திருக்கிறாய்?” என்று தொடர்ந்தான்.

“இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கியிற் கூட்டம் இதுவரை முடித்து விட்டேன்.”

“இனி என்ன இருக்கிறது?” என்றான்.

“அறத்தொடு நிற்றல்; அதாவது தலைவி தனக்கும் தலைவனுக்கும் உள்ள கூட்டத்தைத் தன் தோழிக்கு எடுத்து உரைப்பாள்; அவள் செவிலிக்குச் செப்புவாள்; அவள் தாய்க்கு உணர்த்துவாள்; தாய் அவள் தமையனுக்கும் தந்தைக்கும் அறிவிப்பாள்” என்றான் சீவகன்.

“அந்தப்பகுதிகளை யான் படித்து விட்டேன்; என் தங்கை எங்களுக்கு அறிவித்துவிட்டாள்; எம் தந்தையும் உடன்பட்டு விட்டார். இனிக் கற்பியல்தான்” என்றான். தமிழ்க்காதல் அதி அற்புதம் என்று விமரிசித்துக்கொண்டு இருவரும் வீடுவரை பேசிக்கொண்டே சென்றனர்.