பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழ் இலக்கியக் கதைகள்

கூத்தர் பாடிவிட்டு நிறுத்தியதும் அந்த முதல் இரண்டு அடிகளின் பொருளை உணர்ந்து கொண்ட சோழனும் அவன் அவையினரும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். புகழேந்தியையும் அவருடைய பாண்டிய மன்னனையும் இழிவுபடுத்த முயல்வது போல அமைந்திருந்தது பாடலின் முதற் பகுதி. அது புகழேந்தியின் மனத்தைப் புண்படுத்தினாலும் தயக்கமில்லாமல் உடனே எழுந்தார் அவர். ஒட்டக்கூத்தரைவிட அதிகமான குறும்புச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துக் கொண்டே அவர் தொடர்ந்து பாடலானார். அவை மீண்டும் அமைதி அடைந்தது.

... ... ... ... துன்றும்
வெறியார் தொடை கமழும் மீனவர்கோன்
கைவேல் எறியான் புறங்கொடுக்கின் என்று.”

வெறிஆர்= வண்டுகள் மொய்க்கும், தொடை = மாலை மீனவர்கோன்= பாண்டியன். புறங்கொடுப்பின் = சோழன் புறமுதுகு காட்டினால்,

என்று புகழேந்தி பாட்டை முடித்தார். சோழன் முகத்தில் ஈயாடவில்லை. ஒட்டக்கூத்தர் தலைகுனிந்தார். அவையில் கூத்தர் பாடி முடித்தவுடன் ஆரவாரம் செய்தவர்கள் இப்போது அடித்து வைத்த கற்சிலைகளைப்போல ஆடாமல் அசையாமல் உட்கார்ந் திருந்தனர். புகேழந்தி திரும்பவும் ஒருமுறை முதலையும் முடிவையும் சேர்த்து முழங்கினார்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக்கி டான்கவசம் - துன்றும்
வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல்
எறியான் புறங்கொடுக்கின் என்று.”

முதல், முடிவை அவமானப்படுத்த முயன்றது. முடிவோ, முதலை ஆதாரமாக வைத்துக்கொண்டு முதலையே அவமானப் படுத்தி அகங்காரத்தை அழித்துவிட்டது. புற்றுக்குள்ளே மாணிக்கம் இருக்கும் என்று முதலில் எண்ணிக் கை நுழைத்தவன் முடிவில் உள்ளே இருக்கும் பாம்பினால் தீண்டப் பெற்றார்