பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இதிலிருந்து கலவி செய்யும் சக்தி வேறு, கருவுண்டாக்கும் சக்தி வேறு என்பதும், கருவுண்டாக்கும் சக்தி இல்லாதிருந்தபோதிலும் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை இருந்துகொண்டே இருக்கும் என்பதும் விளங்கும்.

ஆண்மகனுடைய விதைகள் இருவித நீர்களை உண்டாக்குகின்றன. ஒன்றை அகச்சுரப்பு என்றும் மற்றதைப் புறச்சுரப்பு என்றும் மருத்துவர்கள் கூறுவர். அகச்சுரப்புதான் ஆணினிடம் மீசைமுளைக்கச் செய்யும், பருவகாலத்தில் குரலை மாறச்செய்யும், உடம்பை ஆண் உருவம் கொள்ளச் செய்யும், பெண்ணிடம் காதல் கொள்ளச் செய்யும், கலவி செய்தற்கேற்றவண்ணம் கோசத்தைக் கட்டியாக்கும். ஆகவே ஆண்மை அல்லது கலவி செய்யும் சக்தியைத் தருவது இந்த அகச் சுரப்பேயாகும்.

கலவியின் இறுதியில் கோசத்திலிருந்து புறச் சுரப்பு நீர் குய்யத்துள் பாயும். அந்த நீர் விந்து எனப் பெறும். அதில் மிதக்கும் விந்துயிர்களில் ஒன்று பெண்ணின் சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் கலக்கும் போது கருவுண்டாகும். ஆகவே அகச்சுரப்பு நீர் கலவி செய்யும் சக்தியைத் தரும், புறச்சுரப்பு நீர் கரு உண் டாக்கும் சக்தியைத் தரும்.

நான் கூறும் “விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷனைச் செய்தால் புறச்சுரப்பு நீர் உண்டாகாது, அதனால் கருவுற்பத்தியாகாது. அவ்வளவே. ஆப்பரேஷனால் அகச்சுரப்பு நீர் உண்டாவது நிற்காது, அதனால் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை போகாது, அதுமட்டுமல்ல, புறச்சுரப்பு நின்று விடுவதால் அகச் சுரப்பு அதிகப்படும், அதனால் ஆண்மை சக்தி மிகும் என்றே மருத்துவர்கள் கருதுகிறார்கள்.