பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

யாகாமல் கணவனும் மனைவியும் எப்போதும் காதலராக வாழ்ந்து கொண்டு குழந்தை பெறாமலிருக்க முடியும், அதற்காக டாக்டர்கள் ஓர் ஆப்பரேஷன் கண்டுபிடித்திருக்கிறார்களாம். கணவனாவது மனைவியாவது செய்துகொண்டால் பிறகு குழந்தை உண்டாகாதாம். குழந்தைதான் உண்டாகாதே தவிர வேறு எந்த வித்தியாசமும் ஏற்படாதாம். கணவனும் மனைவியும் முன்போலவே சந்தோஷமாக வாழ்வார்களாம்.

கமலம்: ஆனால் ஆப்பரேஷன் என்கிறீர்களே? ஆப்பரேஷன் என்றால் அறுப்பதல்லவா? அதை யார் செய்ய முடியும், வேறு வழி யில்லையா? வேறு வழி சொன்னால்தான் யாரும் கேட்பார்கள்.

சுந்தரம்: கமலம்! உன் மாமாவுக்குப் பல் சொத்தையாகி நோவாயிருந்ததே ஞாபகமிருக்கிறதா?

கமலம்: ஆம், அதற்கு மாமா டாக்டரிடம் கொண்டு காட்டினார். டாக்டர் அந்தப் பல்லுக்குப் பக்கத்திலே ஏதோ கொஞ்சம் மருந்து குத்தினாராம், அப்போது மட்டும் சுருக்கென்று இருந்ததாம். பிறகு பல்லைப் பிடுங்கியபோது நோவே யில்லையாம். அதற்கும் நீங்கள் சொல்லும் ஆப்பரேஷனுக்கும் என்ன சம்பந்தம்?

சுந்தரம்: சம்பந்தமா ? குழந்தை பெறாமலிருப்பதற்காக டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆப்பரேஷனும் அதைப்போல எளிதாம். அறுக்கும்போதும் பிறகும் நோவாதாம். கால்மணி நேரத்தில் முடிந்து விடுமாம். ஆணுக்குச் செய்தால் அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்க வேண்டாம், வீட்டுக்கு வந்து வீட்டிலும் படுத்திருக்க வேண்டாம், ஏழெட்டு நாள் ஓய்வாக இருந்தால் போதும்.