ரங்கதுர்க்கம் ராஜா/மூன்றாம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து

1

ரங்கராஜனுடைய கவனத்தைக் கவர்ந்த ஆச்சரியமான காதல் கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா? அதைக் கடிதம் என்று சொல்வதைவிடக் காவியம் என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். அதனுடைய சில பகுதிகளைச் சற்று ருசி பாருங்கள்:

"என் உடல் பொருள் ஆவியைக் கொள்ளை கொண்ட என் கண்ணில் கருமணி போன்ற, அருமையில் சிறந்த, பெருமையில் மிகுந்த, தேனைப் போல் இனித்த மானைப்போல் விழித்த....குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவிக்கு ரங்கதுர்க்கம் ராஜாவாகிய நான் எழுதிக் கொண்டது.

பெண் பாவாய்!

என் இருதயமானது உமக்காக எவ்வாறு துடிதுடித்துக் கொண்டிருக்கிறதென்பதும், இரவிலும், பகலிலும் கனவிலும், நனவிலும் நான் எப்படி உம்மையே கண்டு, கேட்டு, வருந்தி, மகிழ்ந்து வருகிறேன் என்பதும், எல்லாம் நீர் அறிந்ததே. என்னுடைய இருதயத்தை உமக்குத் திறந்துகாட்டி, 'நான் இருப்பதா? இறப்பதா?' என்னும் கேள்வியை உம்மிடம் கேட்டுப் பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நானும் இந்தக் கப்பல் டோ வர் துறைமுகத்திலிருந்து கிளம்பியது முதல் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதற்கு இதுவரையில் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'நாளைக்கு நாளைக்கென்று' நாள் போய் வருகிறது. 'பொறுத்ததெல்லாம் போதும். இனிப் பொறுக்க முடியாது' என்பதற்கேற்ப இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இரண்டு மூன்று தடவைகளில் உம்மிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்திருக்கிறேன் என்பது வாஸ்தவமே. அப்போதெல்லாம் நீர் 'முடியாது' என்று செப்பியிருக்கிறீர். ஆனால் மனப்பூர்வமாக அப்படி நீர் சொல்லவில்லையென்பது எனக்குத் தெரியும். ஸ்திரீகள் 'முடியாது' என்று சொன்னால், அது 'சரி' என்பதற்கு அடையாளம் என்பதை நான் அறியாதவன் அல்ல. மேலும் நான் மனப்பூர்வமாகக் கேட்கவில்லையென்றும் விளையாட்டுக்குக் கேட்கிறேன் என்றும் நீர் நினைத்திருக்கலாம். அவ்வாறு இல்லையென்றும், இந்த மாதிரி விஷயங்களில் விளையாடும் வழக்கம் எனக்கில்லையென்றும் உறுதி கூறுகிறேன்.

சுருங்கச் சொன்னால், நீர் என்னை மணம் புரிய இசைந்து என்னைப்போல் பாக்கியசாலி உலகில் வேறு யாருமில்லாமல் செய்ய வேண்டுமென்பதற்கு என்னுடைய காரணங்கள் வருமாறு:

(1) நான் உம்மைக் காதலிக்கிறேன்.

(2) நீர் என்னைக் காதலிக்கிறீர்.

(இதை நீர் மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் என்னிடமிருந்து மறைக்க முடியாது. மனத்திற்கு மனமே கண்ணாடியல்லவா?)

(3) என்னைப்போல் எல்லா வகையிலும் சிறந்த குணம், பணம், கல்வி, உருவம், அந்தஸ்து எல்லாம் பொருந்திய மணாளன் உமக்குக் கிடைப்பது அரிது.

(4) உம்மைப்போல் அழகும், குணமும், கல்வியும் பொருந்தியவர்கள் அநேகர் இருக்கலாமாயினும், அவர்களுடைய துர்ப்பாக்கியத்தினால் அப்படிப்பட்டவர்கள் மேல் என் மனம் செல்லவில்லை. அதிர்ஷ்டம் உமக்கு இருக்கும்போது அவர்கள் மேல் எப்படி என் மனம் செல்லும்?

(5) உமக்காக என்னையும், எனக்காக உம்மையுமே கடவுள் படைத்திருக்கிறார் என்பது திண்ணம். இதை நான் மட்டும் சொல்லவில்லை; இந்தக் கப்பலில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆகவே, கடவுளுடைய விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமல்லவா?

என்னுடைய கோரிக்கைக்கு இணங்க நீர் தயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். உம்முடைய தகப்பனாருடைய நிலைமை எனக்குத் தெரியாதோ என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம். நான் அவ்வாறெல்லாம் ஏமாறுகிற பேர்வழியல்ல. உம் தகப்பனாருடைய ஜமீன் கடனில் மூழ்கியிருக்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். பின் ஏன் இந்தச் சம்பந்தத்துக்கு நான் சம்மதிக்கிறேன்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்முடைய தகப்பனாரிடம் இராஜதந்திரம் இருக்கிறது. என்னிடம் பணம் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்துவிட்டால், சென்னை அரசாங்கமே எங்கள் கையில் தான் - இந்த அபிப்பிராயம் எனக்கும் டாக்டர் சிங்காரம் அவர்களுக்கும் ஏககாலத்தில் தனித் தனியே தோன்றியது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்னொரு விஷயம்; நானும் டாக்டர் சிங்காரமும் சில சமயம் ஒரே விஷயத்தைச் சொல்ல நேர்ந்த போது, அவர் சொல்லிக் கொடுத்ததையே நான் சொன்னதாக நீர் சந்தேகப்பட்டீர். இந்தக் கடித விஷயத்தில் அத்தகைய சந்தேகம் உமக்கு ஏற்பட சிறிதும் நியாயம் இல்லை. இதை நானே எழுதினதுமல்லாமல் அவரிடம் காட்டக் கூடவில்லையென்பதை வற்புறுத்தி அறிவிக்கிறேன்.

கடைசியாக, என்னை மணம்புரிய இசையும்படி உம்மை நான் கேட்டுக்கொள்வது ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியம்; அது என்னவெனில், நம்முடைய, சமஸ்தானத்தின் மானேஜர் மிஸ்டர் ஹுட்துரை சம்மதத்தின் பேரில் தான் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடும். சமஸ்தானம் மன்னர்களின் கல்யாணம் மற்றச் சாதாரண மனிதர்களின் கல்யாணங்களைப் போலல்ல. இது ஓர் இராஜாங்க விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மிஸ்டர் ஹுட் துரைக்கு உம்மைப் பிடித்திருக்குமென்று எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு. ஏனெனில், உம்மைப்போன்ற நாகரிகமடைந்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவர் பல தடவைகளில் சொல்லியிருக்கிறார். உம்மைப்பற்றி நான் தக்க முறையில் எடுத்துக் கூறினால் அவர் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிராது.

இந்த நிபந்தனைக்குட்பட்டு நமது கல்யாணத்தை இப்போதே நிச்சயம் செய்துவிட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன்!

இந்தக் கடிதத்துக்குத் தாங்கள் உடனே சம்மதமான பதிலைத் தெரிவிக்க வேண்டியது. இன்று மாலைக்குள் தங்களிடமிருந்து அநுகூலமான பதில், கடித மூலமாகவோ வாய்மொழியாகவோ கிடைக்காவிட்டால் இன்றிரவு நான் தற்கொலை செய்து கொள்வேன்; அல்லது அந்த முயற்சியில் பிராணனை விடுவேன் என்பது சத்தியம், சத்தியம், சத்தியம்.

இங்ஙனம், நளின பூஷண ராவ் ராஜா ஆப் ரங்கதுர்க்கம்

2

மேற்படி கடிதத்தைப் படித்ததும் முதலில் கொஞ்ச நேரம் ரங்கராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. அப்புறம் சிறிது விளங்க ஆரம்பித்தது. புத்தகங்கள் நிறையப் படித்து ஜீரணிக்கப் பெறாதா பொறுக்கி எடுத்த முட்டாள் ஒருவனால் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜமீன்தார்கள், ராஜாக்கள் முதலியோரிடம் ரங்கராஜன் எப்போதுமே அதிக மதிப்பு வைத்ததில்லை. ஆனால் இத்தகைய கடிதம் எழுதக் கூடிய புத்திசாலி ஒருவன் அவர்களிடையே இருப்பான் என்று அவன் கூட எதிர்பார்த்தது கிடையாது. அதிலும் அந்தக் கடைசி வாக்கியம்!

ஒரு விஷயம் அவனுக்கு திருப்தியளித்தது. இந்தக் கடிதம் யாருக்கு எழுதப் பெற்றதோ, அந்தப் பெண்மணி இந்த வடிகட்டின அசட்டினுடைய அதிசயமான காதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்பது நிச்சயம். ஆனால் உடனே இன்னோர் எண்ணம் தோன்றியது; அப்பெண் தன்னைப் பார்த்தபோது, இக்கடிதத்தை எழுதிய புள்ளி என்று தானே நினைத்திருப்பாள்? ஐயோ! அவமானமே!

ரங்கராஜனுக்கு வெகு கோபம் வந்தது. அந்த முட்டாள் டாக்டரைக் கண்டு இரண்டு திட்டுத் திட்டி விட்டுக் கடிதத்தை அவரிடம் கொடுத்து வர வேண்டுமென்று கிளம்பினான். அறைக்கு வெளியே நாலடி வைத்ததும் ஓர் இளம்பெண் எதிரில் வருவதைக் கண்டான். முதன் முதலில் தனக்கு ஸ்மரணை வந்தபோது எதிரில் நின்றவளும், புகைப்படத்திலிருந்தவளும் இந்தப் பெண் தான் என்பதில் சந்தேகமில்லை. சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அந்தப் பித்துக்கொள்ளி டாக்டரைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதிலாக இவளிடம் கடிதத்தை கொடுத்து விட்டாலென்ன?

நல்ல யோசனைதான். ஆனால் எனது கதாநாயகனைப் பற்றி இதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதை நிறைவேற்ற அவனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. சர்வகலாசாலையின் பரீட்சை மண்டபம் எதிலும் ஏற்படாத மயக்கமும் தயக்கமும் இப்போது அவனுக்கு ஏற்பட்டன. இந்த நெஞ்சு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது? பகவானே! இதோ நெருங்கி வந்துவிட்டாள், ஆனால் இந்த நாக்கு ஏன் இப்படி ஒட்டிக் கொள்கிறது? -இந்த அசந்தர்ப்பமான நிலைமையிலிருந்து அவனை என் கதாநாயகியாக்கும் விடுதலை செய்தாள்.

"என்னுடைய கடிதம் ஒன்று தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அப்படியானால் அதைத் தயவுசெய்து கொடுத்து விடுகிறீர்களா?" என்று ஸ்ரீமதி பிரேமலதா கேட்டபோது, ரங்கராஜன் இரண்டாந்தடவை சமுத்திரத்திலிருந்து தன்னை யாரோ தூக்கி எடுத்துக் காப்பாற்றியது போன்ற உணர்ச்சியடைந்தான். ஆனால், இன்னமும் சிறிது தடுமாற்றத்துடனேயே, "மன்னிக்க வேண்டும், அந்தக் கடிதம் என்னிடம் வந்ததற்கு நான் ஜவாப்தாரியல்ல. இப்போது அதைத் திருப்பிக் கொடுப்பதற்காகத்தான் அந்தப் பைத்தியக்கார டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை நீட்டினான். பிரேமலதா அதை வாங்கிக் கொண்டு "அவர்கள் பேரிலெல்லாம் குற்றம் சொல்லக் கூடாது. என்னுடைய தவறுதான். நான் உடனே அதைக் கிழித்தெறிந்திருக்க வேண்டியது. இருந்தாலும் ரொம்ப விசித்திரமான கடிதமாயிருந்தபடியால் வைத்திருக்கலாமென்று தோன்றிற்று," என்று சொல்லிக் கொண்டே அதைச் சுக்கு சுக்காய்க் கிழித்துச் சமுத்திரத்தில் எறிந்தாள். இதற்குள் அவர்கள் கைப்பிடிக் கம்பிகளின் ஓரமாய் வந்திருந்தார்கள்.

"அந்த டாக்டர் பைத்தியம் அக்கடிதத்தை நான் எழுதினேன் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் பெரிய வேடிக்கை," என்றான் ரங்கராஜன்.

"அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லை. ஒருவர் நான் இன்னார் இல்லையென்றால் 'இல்லை; நீர் அவர் தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? என்னை அப்படி யாராவது சொன்னால் கோபந்தான் வரும்," என்றாள் பிரேமலதா.

இவள் சொல்வதில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்குமோ என்று ரங்கராஜன் சந்தேகம் கொண்டான். அதாவது உண்மையில் தான் ரங்கதுர்க்கம் ராஜாவென்றே எண்ணி, ஆனால், புத்தி மாறாட்டமாயிருக்கும் நிலைமையில் அதை வற்புறுத்திச் சொல்லாமலிருப்பதே நலமென்று கருதி இப்படிக் கூறுகிறாளோ என்று நினைத்தான்.

இதைப் பற்றி அவன் சிந்திப்பதற்குள் பிரேமலதா "ஆமாம், நீங்கள் மூடர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ விருப்பமின்றிக் கடலில் குதித்ததாகக் காப்டனிடம் சொன்னீர்களாமே, அது உண்மையா?" என்று கேட்டாள்.

"உண்மைதான். ஆனால், அப்படிச் செய்தது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்" என்றான் ரங்கராஜன்.

"ஜலத்துக்குள் முழுகினதும் பயமாயிருந்ததாக்கும்!" என்று சொல்லி பிரேமா புன்னகை புரிந்தாள்.

இவ்வாறு ஒரு பெண்ணினால் பரிகசிக்கப்படும் நிலைமையைத் தான் அடையக் கூடுமென்று ரங்கராஜன் கனவிலும் கருதியதில்லை. ஒரு பக்கம் கோபம்; ஒரு பக்கம் வெட்கம்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. பயம் என்பது எப்படியிருக்குமென்றே எனக்குத் தெரியாது." இப்படிச் சொன்னதும் ரங்கராஜனுக்கு வெட்கமும் கோபமும் இன்னும் அதிகமாயின. ஒரு பெண்ணிடம் தான் தைரியசாலி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும்படியான நிலைமை வந்ததே! என்ன வெட்கக் கேடு! எக்காரணத்தினாலோ அவளை விட்டுச் செல்வதற்கும் மனம் வராததால் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று.

"பின்னர் இந்தப் பச்சாதாபம் ஏன் ஏற்பட்டது?" என்றது பிரேமாவின் பரிகாசக் குரல்.

"என்ன பச்சாதாபம்?"

"கடலில் விழுந்தது தவறு என்ற எண்ணம்."

இதற்குத் தக்க விடை கண்டுபிடிக்க ரங்கராஜன் ஒரு பெரிய மானஸிக முயற்சி செய்தான். "தங்களைப் போன்ற பெண்மணி வசிக்கக்கூடிய உலகத்தை விட்டுப் போக முயல்வது தவறேயல்லவா?" என்றான். இவ்வளவு தைரியம் தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்க அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.

பிரேமலதாவின் முகத்தில் நாணத்தின் ஒரு மெல்லிய சாயை தோன்றி மறைந்தது. பின்னர் அவள், "அதுதான் உண்மையான காரணமென்றால் நீங்கள் கடலில் விழுந்ததில் தவறில்லையே!" என்றாள்.

"அது எப்படி?"

"கடலில் விழுந்ததனால் தானே என்னைப் போன்ற பெண்மணி ஒருத்தி இருப்பது உங்களுக்குத் தெரிய வந்தது?"

ரங்கராஜன் தன் மனத்திற்குள், "அப்பனே! உனக்கு நன்றாய் வேண்டும்! நீ தான் மகா மேதாவி, உலகத்திலேயே பாக்கியெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணியிருந்தாயல்லவா? இப்போது கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழி!" என்று சொல்லிக் கொண்டான்.

3

"உங்களுக்கு ஆட்சேபமில்லையென்றால் இந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசலாமென்று தோன்றுகிறது," என்றாள் பிரேமலதா.

"இதில் ஆட்சேபம் என்ன இருக்கக் கூடும்?" என்றான் ரங்கராஜன்.

"இல்லை; உலகத்தில் எல்லாருந்தான் உட்காருகிறார்கள். ஆனால், புத்திசாலிகளும், அவர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த உலகத்தைத் தகுதியாக்குகிறவர்களும் உட்காரலாமோ என்னவோ என்று சந்தேகமாயிருந்தது."

ரங்கராஜன் வாய்விட்டுச் சிரிக்க வேண்டி வந்தது. பார்த்தால் பரம சாதுவாய்த் தோன்றும் இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு எப்படி வந்தது என்று வியந்தான்.

இருவரும் உட்கார்ந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் வெளி வந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசிற்று. அலைகளினால் மோதப்பட்ட கப்பல் தொட்டில் ஆடுவது போல் அசைந்து கொண்டிருந்தது.

"இந்த உலகம் சிலருக்கு வெறுத்துப் போவது ஏன் என்பது எனக்கு விளங்குவதேயில்லை. உலகத்தில் அநுபவிப்பதற்கு எவ்வளவு இன்பங்கள் இருக்கின்றன! உதாரணமாக, சாயங்கால வேளைகளில் கப்பல் பிரயாணத்தைப் போல் இன்பமளிப்பது வேறென்ன இருக்கக்கூடும்?"

"உண்மைதான், ஆனால், இவையெல்லாம் இரண்டாந்தரமான சந்தோஷங்களே. ஒத்த மனமுள்ளவர்களின் சல்லாபமும் சேரும்போதே இயற்கை இன்பங்கள் கூட உயிருள்ளவையாகின்றன."

இந்தக் கட்டத்திலேதான், இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூறியபடி டாக்டர் சிங்காரமும் ஜமீன்தாரிணியும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலேயே சிறிது பிரமித்து நின்ற பிறகு, அவர்கள் அருகில் வந்தார்கள். "ராஜா சாகிப், நான் செய்த மெஸ்மெரிஸம் பலித்துவிட்டதல்லவா? ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்துக் கொண்டு டாக்டர் சிங்காரம் ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

ஜமீன்தாரிணி, "என்ன ராஜாசாகிப்! உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.

ரங்கராஜன் எழுந்து நின்று, "சௌக்கியம் தான், அம்மா! உட்காருங்கள்," என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினான்.

"இல்லை, இல்லை. நாங்கள் வேறு காரியமாகப் போகிறோம். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்" என்றாள் ஜமீன்தாரிணி.

டாக்டர் சிங்காரம், "பிரேமா! ஜாக்கிரதை! ராஜா சாகிப் மறுபடியும் கம்பிக்கு அருகே போனால் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்," என்றார்.

"நானும் கூட விழுவதற்கா? அவ்வளவு தியாகத்திற்கு நான் தயாராகயில்லை," என்றாள் பிரேமா. ஆயினும் அச்சமயம் அவள் ரங்கராஜனைப் பார்த்த பார்வை அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிப்பதாயிருந்தது.

டாக்டரும் ஜமீன்தாரிணியும் போன பிறகு ரங்கராஜன், "இந்த டாக்டரைப் போன்ற மனிதர்களுடனேயே ஒருவன் பழக வேண்டுமென்றிருந்தால் கடலில் விழுந்து பிராணனை விடலாமென்று தோன்றுவது ஆச்சரியமா?" என்றான்.

"நான் அப்படி நினைக்கவில்லை. அசட்டுப் பேச்சுக்களைக் கேட்பதிலும் அசட்டு மனிதர்களுடன் பழகுவதிலுங்கூட ஒரு ரஸம் இல்லையா? கடவுள் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் அநேக சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாமே? உதாரணமாகப் பாருங்கள்; நான் இப்போது கிழித்தெறிந்த காதல் கடிதம் எவ்வளவு ரஸமாயிருந்தது? இம்மாதிரி கடிதம் ஓர் ஆசிரியரின் கற்பனையிலிருந்து தோன்றியிருந்தால், நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போம்?"

"வாஸ்தவந்தான். இந்தக் கடிதத்துக்கு உபமானமாகச் சொல்லக் கூடிய கட்டம் ஒன்று ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்டு பிரெஜுடிஸ்" என்னும் நாவலில் வருகிறது."

"காலின்ஸ், எலிஸபெத்திடம் தன் காதலை வெளியிடுகிறானே, அதைத்தானே சொல்கிறீர்கள்?"

ரங்கராஜனுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சுவையை அறிந்து அநுபவிப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லையென்பது அவன் எண்ணம். இந்தப் பெண் அதைப் படித்திருந்ததுமல்லாமல், தான் எந்த கட்டத்தை மனத்தில் நினைத்தானோ, அதையே சொல்கிறாள்.

"ஜேன் ஆஸ்டின் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமோ?" என்று கேட்டான்.

அவ்வளவுதான்! அப்புறம் இரண்டு மணி நேரம் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒருவருக்குப் பிடித்த ஆசிரியர்களும் புத்தகங்களும் இன்னொருவருக்கும் பிடித்திருந்ததாகத் தெரியவந்தது.

கடைசியாக, அவர்கள் பிரிந்து செல்லும் தருவாயில் பிரேமலதா, "நீங்கள் ரங்கதுர்க்கம் ராஜா இல்லையென்று எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை. நானாயிருந்தால் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவேன்," என்றாள்.

2

ரோஸலிண்ட் கப்பல் பம்பாய்த் துறைமுகத்துக்குச் சாதாரணமாய் வந்து சேர வேண்டிய தினத்துக்கு மூன்று நாளைக்குப் பிறகு வந்து சேர்ந்தது. துறைமுகத்துக்குச் சுமார் இருநூறு மைல் தூரத்தில் கப்பல் வந்தபோது பெரும் புயலடித்ததாகவும், அதன் காரணமாகக் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தன. துறைமுகத்துக்குச் சமீபத்தில் வந்து கப்பல் நின்றதும் தயாராய் அங்கே காத்திருந்த படகு ஒன்றிலிருந்து அவசரமாய் ஒரு மனிதன் கப்பலில் ஏறினான். அவன் நேரே கப்பல் தலைவரிடம் சென்று ஒரு தந்திச் செய்தியைக் கொடுத்தான். அதைப் படித்ததும் காப்டனுடைய முகம் சிவந்ததைப் பார்த்தால், தலைகால் தெரியாத கோபம் அவருக்கு அதனால் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமிருந்தது. சாதாரணமாய், மிதமிஞ்சிக் குடித்திருக்கும் போது கூட அவர் முகம் அவ்வாறு சிவந்தது கிடையாது. வந்த தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, "எங்கே அந்த மோசக்கார பையன்?" என்று கேட்டுக் கொண்டே அவர் விரைந்து நடந்தார். கடைசியாக, அவர் ரங்கராஜனைக் கண்டுபிடித்ததும், "மிஸ்டர்! எங்களையெல்லாம் நீர் ஏமாற்றி விட்டீரல்லவா? இந்தியர்களே இப்படித்தான்," என்றார்.

"நானா ஏமாற்றினேன்? என்ன ஏமாற்றம்?" என்று புன்னகையுடன் ரங்கராஜன் கேட்டான்.

பக்கத்திலிருந்த டாக்டர் சிங்காரம், "என்ன காப்டன் இந்தியர்களைப் பற்றி இப்படி அவதூறு கூறுகிறீர்? யார் என்ன ஏமாற்றினார்கள்?" என்றார். ஜமீன்தாரிணியும் கூடச் சேர்ந்து, "என்ன, என்ன?" என்று கேட்டாள்.

"இதோ பாரும் இந்தத் தந்தியை," என்று காப்டன் தந்தியை நீட்டினார்.

ரங்கராஜன் கையை நீட்டி தந்தியை வாங்கினான். அவன் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக் கொண்டது. தன் ஜீவியத்தின் அபூர்வ இன்பக் கனவு இந்த க்ஷணத்தோடு முடிவடையப் போவதாக அவனுக்குத் தோன்றிற்று.