பக்கம்:வீர காவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீரகாவியம்

34

இயல் 14

வேழன்றன் துயர்நீக்க வந்தான் போல
வெங்கதிரோன் இருள்நீக்கி விரைந்து வந்தான்.

இன்னலுறும் பிணியாளன் துயரந் தீர்க்க
      இனியமொழி வழங்கவரும் நண்பன் போலப்
பன்னரிய பெருங்காதற் பிணிப்புண் டாங்கண்
      பைதலுறும் மாவேழன் நிலைமை காணத்
துன்னுமிருள் செகுத்தெழுந்து கீழை வானில்
      சுடர்க்கதிரோன் முகங்காட்டி விரைந்து வந்தான்;
மன்னவரும் பணியவரும் ஆற்றல் கொண்ட
      மாவீரன் வெய்துயிர்த்துப் புரண்டி ருந்தான். 48

நீலநிறப் பட்டாடை விரிப்பைப் போலும்
      நெடுங்கடலாம் எழிற்பாயல் நீங்கி வெய்யோன்
கோலமுகஞ் சிவந்தெழுந்தான்; வீரன் றானும்
      கொய்ம்மலர்கள் வதங்கிவிழும் அணையின் நீங்கி,
ஞாலமுற வெறுத்தனன்போல் நிலத்தை நோக்கி
      நடுசிலைபோல் நெடும்பொழுது தனித்தி ருந்தான்;
வேலவன்பின் நிலமளப்பான் போலெ ழுந்து
      வியனறையில் நடைபயின்றான் அங்கு மிங்கும்.49


பைதல்-துன்பம், செகுத்து-அழித்து, பாயல்-படுக்கை, வியனறை - பேரறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/37&oldid=911504" இலிருந்து மீள்விக்கப்பட்டது