பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறரைப் பார்த்து, பிறர் அனுபவங்களை அறிந்து, உங்கள் திறமைகளை மதிப்பிட்டு, அதன்பின் நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுங்கள்.

அந்த முறைதான் உங்களுக்கு உதவும்.

இந்நூலில் எழுதப்பெற்றிருக்கும் கருத்துக்கள் யாவும், கற்பனைக் கலா மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, மந்திர தந்திரக் காட்சிகளை விவரிக்கும் தன்மை போல் எழுதப்பட்டவை அல்ல.

நான் என் வாழ்க்கையில் பட்ட பாடுகள், அடைந்த அனுபவங்கள். ஆட்பட்ட அல்லல்கள், பிறர் உதவியை நம்பி ஏமாந்த பேரிடர்கள். அவற்றால் தெரிந்து கொண்ட உண்மைகள்தான் இதில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.

பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்து, பலதொழில் நிறுவனங்களுக்கு விளையாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று, இன்று பல தொழில்களைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் எனது வாழ்க்கை அனுபவங்களின் சாறுதான் இந்த நூலாகும்.

வாழ்க்கையில் தனித்தன்மையுடன் உயர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது. நீங்கள் படித்துப் பயன்பெற விரும்புகிறேன்.

அழகுற அச்சிட உதவிய ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும், அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.

லில்லி பவனம்

அன்பன்

சென்னை - 17

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா