பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பொதிகைமலை எனப்படுகின்ற மூன்று மலைகளையும், சேரநாடு, சோழ நாடு, தென்னாடு எனப்படுகின்ற மூன்று நாடுகளையும். பொருநை நதி, காவிரி நதி, வைகை நதி எனப்படுகின்ற மூன்று நதிகளையும், கொடை முரசு, படை முரசு, மண முரசு என்ற மூன்று முரசுகளையும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் எனப்படுகின்ற மூன்று தமிழ்களையும் வில் கொடி, புலிக் கொடி, மீனக்கொடி எனப்படுகின்ற மூன்று கொடிகளையும் பாடலம், கனவட்டம், கோரம் எனப்படுகின்ற மூன்று குதிரைகளையும் தாம் முறையாகப் பெற்ற சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவரசர்கள் தம் தம் முடிகளில் மேலும் கொள்ளப் பட்ட மாலை அன்றே என்பது.

சீத்தலைச் சாத்தனார் அறிவு ஆற்றலைக் காண விழையும் நாம், இப்புலவர் பாடியுள்ளனவாகக் கிடைத்துள்ள பாடல்களை நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு புறநானூறு திருவள்ளுவமாலே நூல்களில் பரக்கக் காணலாம். இப்பாடல்கள் தனித் தனிப்பாடல்கள். இவர் ஒரு பெருங்காவிய நூலாகச் செய்ததே மணிமேகலை என்னும் பெயருடைய நூலாகும். இம்மணிமேகலை என்னும் நூலில் இவர் கூறியுள்ள கருத்துக்களில் புத்தமதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் கூறியிருப்பது கொண்டு இப்புலவர் பெருமானார் புத்த மதத்தினர் என்பது புலனாகிறது. ஈண்டு நாம் இப்பெருந்தகையாரது புலமைப் பெருக்கை அறிந்து இன்புறுதற்கு இவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலையே பற்றுக் கோடாகக் கொள்வோமாக. இவரது ஏனைய பாடல்களின் இன்சுவையினை நுகர்தற்கு இவ்வேடு இடந் தராது. பின்னால் நீங்களே அப்பாடல்களைப் படித்துப் பெரும்பயன் பெறுவீர்களாக.

சாத்தனார் பாடினதாகப் புறநானூற்றில் காணப்படும் பாடல் ஒன்றே ஆகும். அப்பாடல்