பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்டபத்தே அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் ஆகிய ஐம்பெருங்குழுவும், கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் ஆகிய எண்பேராயமும் புடைசூழத் தம் மைந்தர்களான செங்குட்டுவனும் இளங்கோவும் இருமருங்கிருக்கச் செம்பியரும் தென்னரும் தன்னடி போற்றும் தகைமையோடு இனிது வீற்றிருந்தனன். அப்போழ்தத்து ஆண்டு ஒரு நிமித்திகன் போந்தனன்.

நிமித்திகன் என்பான் சோதிடனாவான், சோதிட வல்லுநர் நம் நாட்டில் பலர் இருந்திருக்கின்றனர், சோதிடரைக் கணியன் என்று கன்னித் தமிழ் கழறுதல் உண்டு. அப்படிக் கணியராய் இருந்த புலவர் ஒருவரும் “கணியன் பூங்குன்றனார்” என அழைக்கவும் படலானார். நம்மவர் சோதிடக் கலையின் நுண்ணறிவை நம் தமிழ் நூல்களில் பலபடக் காணலாம். ‘மகத்தில் புக்கதோர் சனியெனக் கானாய்’ என்பது ஆளுடை நம்பிகளது மொழியாகும். இத்தகைய கலையில் வல்லான் ஒருவன் தன் அவைக்கு வரக்கண்ட அண்ணல் நெடுஞ்சேரலாதன், நல்வரவு கூறி, நல்லிருக்கை ஈந்து அமரச் செய்தனன். அறிவுடைய கணியர்கள் கணக்கிட்டுத் தான் சோதிடப்பலன் உரைத்தற்குரியர் என உரைத்தற்கில்லை. ஒருமுறை ஒருவரை ஏற இறங்கப் பார்த்த மாத்திரையில் பலனைக் கூறவல்ல அத்துணை நுண்ணறிவு படைத்தவர்கள். அவர்களுள் நெடுஞ்சேரலாதனைக் கண்டு செல்ல வந்த கணியன், கைகேர்ந்த அனுபவன் வாய்ந்த நிமித்திகன் ஆதலின், அரசனுக்கு இருமருங்கினும் அமர்ந்த இரு பெருங் காளையர்களான செங்குட்டுவனையும் இளங்கோவையும் உற்று நோக்கினன். முன்னவன் மூத்தவன் என்பதையும், பின்னவன் இளையவன் என்பதையும்