பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றும், 'காற்றினும் கடுகிப் பாயும் கலினமா உடைய கண்ணியோனே, எனவும் விளித்து "யான் நாடிநின் அகத்தை அடைந்து நின்மலையைப் பாடி நின்னையும் வாழ்த்தி நின்றேன். அப்பொழுது ஓர் எழிலுடை யணங்கு நின்பேரைக் கேட்டதும் அகத்தினின்றும் புறத்தே போந்து, நீர் வார்கண்ணளாய், குழல்போல் இசைக்கும் ஒலியுடன் அழத் தொடங்கினாள். அவளது இரக்கநிலை இன்னது என அறிகிலேன். அவள் யாராகிலும் என்? அவள் உன்பேரைக் கேட்ட அளவில் வாட்டமுற்று அழும் அழுகையளாகக் காணப்படுதலின், உனக்கு உறவினளாயினும் சரியே, அவளுக்கு நீ தண்ணளி செய்யவேண்டுவது உன் தலையாய கடனாகும்" என்று கூறினார். இங்ஙனம் கபிலர் பாடி அறிவுறுத்திய பாடலால், நின்மலை யில் குறவர் மாக்கள் கடவுளைப் பேணி மழை வேண்டிய போது அம்மழையினைப் பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகருமாறு போல, இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்பவளாக வேண்டும், என்னும் பொருள்படப் புலவர் பாடியுள்ளார் என்னும் கருத்துத் தொனிக்கின்றதன்றோ?

பரணர், பேகன் இல்லம் சென்றனர்! சென்று செவ்வழிப் பண்ணை யாழில் இசைத்துப் பேகனது மழைதவழ் மலையினைப் பாடி நின்றனர். பேகன் மனைவி கண்ணகி, எப்பொழுதும் பேகன் நினைவே நினைவாகக் கொண்டு இனைந்து வாழ்ந்து வந்தனள். ஆதலின், பல நாள் உண்ணாது பட்டினியால் கிடப்பவன் காதில் "கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா?" என்று விரைவது போல, பேகன் என்னும் பெயரை எவர் கூறினும், பேகனைக் காணாது போயினும், அத்திரு நாமத்தைச் செப்பியவனையேனும் கண்டு சிறு மகிழ்வு கொள்ளும் நிலையில் இருந்தவள் கண்ணகியாதலின், பரணர் பேகனையும் பேகன் வாழ் மலையினையும் பாடி வந்தபோது