பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86சீவக சிந்தாமணி



அன்று அனுமன் இராமன் தந்த கணையாழி தந்தான். அது அவள் சோகத்தை மாற்றியது; அதேபோல நீயும் இந்த மோதிரத்தை அன்பின் அடையாளமாக அவளிடம் கொடு” என்று சொல்லிச் செய்தியை ஒலையில் பொறித்து அனுப்பினான்.

“உன் நண்பர்களுக்குத் தோழன் நீ அவளுக்கு நீ தோளன்; உன் தோள் துணையாகத் தான் அவள் துயில முடியும். நாள் கடத்தாதே” என்று சொல்லிவிட்டு விண் வழியே விரைந்தது.

வானத்து வீதியை அவள் விழிகள் பார்த்துக் கொண்டு காத்திருந்தன. சென்ற கிளி கொண்டு வரும் செய்தி யாதாக இருக்குமோ எனக் கவன்று இருந்தாள். பச்சையாக எது தெரிந்தாலும் அது கிளி என நினைத்தாள். பச்சை என்ற பெயரைக் கேட்டாலே அவள் பசி தீர்ந்தது போல் ஆயினாள்.

பறந்து வந்த கிளி கொண்டு வந்த செய்தி கேட்பதற்கு முன் அதற்கு அடிசில் ஊட்டினாள்; பால் பிசைந்து சோறு காட்டினாள். அதுகொண்டு வந்துகொடுத்த மோதிரத்தை வாங்கித் தன் முலைக் குவட்டில் வைத்து, மகிழ்ந்தாள். கிளியை மெல்லப் படுக்க வைத்து, ‘உறங்குக’ என்று சொல்லித் தடவிக் கொடுத்தாள். தினந்தோறும் இதைப் போன்ற வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அந்தக் கிளி எண்ணிப் பார்த்தது. பாலும் சோறும் பாங்காய்த் தந்திடுவாள் என்று மனநிறைவு கொண்டது.

காதலுக்காக யார் யாரையோ தூதுவிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறது; மேகத்தைத் தூதுவிட்டுக் காதலிகள் தம் சிநேகத்தைத் தெரிவித்தது அதுக்குத் தெரியும். நளன் அன்னத்துக்குத் தந்த செய்தியும், தமயந்தி தூது அனுப்பியதும் நளவெண்பா என்னும் நூலில் படித்திருக்கிறது; தென்மதுரையில் கோயிலில் குடி