பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100சீவக சிந்தாமணி



அவன் ஏக்கத்தை அறிந்த சுதஞ்சணன் அவன் தூக்கத்தைக் கலைக்கத் தொடங்கினான்.

“ஒரு ஊரில் ஒரு நாட்டாண்மைக்காரன் இருந்தான். அவன் தன் கடமையை மறந்து ஏதோ சிந்தனையில் கிடந்தான்” என்று தொடங்கினான். ஏதோ கதை சொல்கிறான் என்று சீவகனும் காது கொடுத்துக் கேட்டான்.

“அவன் தன் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தான். நரி ஒன்று வந்து நாட்டாண்மைக்காரன் நான்தான் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு ஊராரை மருட்டிக் கொண்டு வேளைக்கு ஒரு கிடாய் தின்னக் கேட்டது.”

“தட்டிக் கேட்க நாட்டுத் தலைவன் இல்லை; நரி இட்டதுதான் சட்டம்; மக்கள் அந்த நரியை எதிர்க்க முடியாமல் தவித்தனர்.”

“அவர்கள், சூழ்ச்சி மிக்க சிறு நரியின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்று பேசத் தொடங்கினர்” என்றான்.

உடனே இவன் தூங்கி எழுந்தவனாய், “ஏன் அந்தத் தலைவன் என்ன ஆனான்?” என்று கேட்டான்.

“ஏதோ பழைய நினைவுகளில் கடமையை மறந்து அவன் துரங்கிக் கொண்டிருக்கிறான்” என்றான். உடனே நினைவுகளில் இருந்து எழுந்து தன் கடமை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான்.

“அந்தக் கட்டியங்காரனை அடித்து நொறுக்க வேண்டும்” என்றான் சீவகன்.

“கவலைப்படாதே நானே சென்று அவனை அழித்து நாட்டை உனக்குப் பிடித்துத் தருகிறேன்” என்றான்.