பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

போனார். சோழ நாட்டின் சிறப்புக்களைச் சொல்ல மறந்தார். சோழனைப் பற்றிப் பேசவும் மறந்தார்.

மதுரை புலவர்களில் தலைவராகிய ஒருவருக்கு அவரை எப்படியாவது தலை குனியச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ‘படித்த வனாம்! தமிழ்ப் புலவனாம்! சிறிதாவது பணிவு இருக்கிறதா? தமிழின் எல்லையைக் கண்டவர்யார்? இவன் அகத்தியரின் அவதாரமாகத் தன்னை நினைத்துப் பேசுகிறானே!’ என்று அவரிடம் அவமதிப்பே உண்டாயிற்று.

“அதெல்லாம் சரி புலவரே, நாம் இப்போது எதாவது பாடல் சொல்லலாமே. உங்கள் சோழ மன்னனுடைய புகழை வைத்து ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்றார் புலவர் தலைவர்.

சோழ நாட்டுப் புலவர் தக்க சமயம் வந்தது என்று கருதிப் பாடலைச் சொல்ல ஆரம்பித்தார். சோழனுடைய வீரத்தைத் தெரிவிக்கும் ஒரு பாடலைப் பாடினார்.

“சோழன் மகா வீரன். போரில் புறம் கொடாமல் வெல்பவன், ஆகவே அவன் கவசம் அணியும் போது முதுகுக்கு அணிவதில்லை. யாருக்கும் புறமுதுகு காட்டாத நிலையில் அதற்குப் பாதுகாப்பு எதற்கு?” என்ற பொருளை வைத்து. பாட்டின் முதல் இரண்டு அடிகளைப் பாடினார் புலவர். பின் இரண்டு அடிகளிலே இதற்கு உரிய காரணத்தைச்சொல்லாம் என்று நினைத்திருந்தார்.