பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒளவை சு. துரைசாமி

இத்துறவிகளையும் கடவுளர் என்பது பழந்தமிழ் மரபாயிற்று. சடை முடித்துப் பலகாலும் நீராடித் தோலுடுத்துக் காய்கனி கிழங்கு இலைகளை உண்டு காடும் குன்றுமாகிய இடங்களில் வாழ்வது துறவோர் நிலைமையாகும். இவர்கள் ஏனையோர் போல நல்வினை செய்து துறக்க வின்பம் பெறவிழையாது, உற்ற நோய் பொறுத்தலும் உயிர்கட்கு ஊறு செய்யாமையுமாகிய தவம் மேற்கொண்டு மெய் யுணர்ந்து அவாவறுத்து ஒழுகுவர். இப்பெருமக்களது வாழ்வு முழுதுமே சமய நெறியில் இயங்குதலால், இவர்கட்கெனத் தனி நிலையில் சமய வாழ்வும் வழிபாடும் இல்லை. இவர்கள் சொல்லுவனவும் நினைப்பனவும் யாவுமே கடவுட் பெரும் பொரு ளோடு கலந்து பிரிப்பின்றிப் பிறங்கும். இவர்கள் நெஞ்சின்கண் நின்று நிலவும் கடவுள், “பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற்றுப்” பெரும் பெயர்க் கடவுள். முற்றுந் துறந்த முனிவரரும் முடியுடைய மூவேந்தரும் தலைசாய்த்து வணங்கியது இக்கடவுளையேயாகும். “பணி"இயர் அத்தை நின்குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே” என்று சான்றோா தெருட்டுதல் காண்க

முழுமுதல் கடவுட்கும் மண்ணுலக வுயிர் கட்கும் இடையே நிலவும் தெய்வங்கள் மக்களுடைய வழிபாட்டையேற்று அவர்கள் நலம்பெறத் துணை புரியும் என்ற கருத்தால் பகைப்பொருளை வெல்வ தற்கும் துன்பத்தினின்றும் உயிர்களைக் காத்தற்கும்