பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆ ஒளவை சு. துரைசாமி

என்று பொருளைத் தருகிறது. முன்னைத் தவத்தால் இப்பிறப்பில் சிவத் தொண்டுபுரியும் நிலைமை எய்திற்றென்றும் அதன் கண் நின்று உயர்ந்தனர் நாவுக்கரசர் என்பதும் அதன் கருத்து.

இங்ஙனம் கிளியும் பூவையும் பாடும் நந்தவனம் புகுந்து போந்த வானளாவியுயர்ந்த மதில் சூழ்ந்த தில்லை நகரின் குடதிசை வாயிற்புறம் வந்துற்றார். வருகையறிந்த தில்லையுறையும் தவமுதல்வர்களான அடியார்கள் அவரை எதிர் கொள்ள வாயில் கடந்து வயல்பக்கம் சென்ற வழியூடு சென்று நாவரசை எதிர் தொழுது அணைந்தனர். குடதிசைக் கோயில் வாயிற் புறத்து உள்ளது சிவமே நிலவிய வீதி, அங்கே கல்வித்துறை வல்ல பலரும் மறை முதல் கரை கண்டவரும் வாழும் செல்வக் குடிகள் நிறைந்தது. சிற்றம்பலம் மேய செல்வன் கழல் தொழும் செல்வம் மிக்கன அக்குடிகள் என்பாராய்க் கழல் பேணும் செல்வக் குடி நிறை நல்வைப்பு” என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார்.

மணிமாலைகளும் மலர்மாலைகளும் நிறைந்த அவ்வீதியில் பல்வேறு புவனங்கட்கு முதல்வரான இமையவர் முடிகள் தாக்குண்டு உதிரும் மணித்துகள் பரவுகிறது; அதனைக் காற்றுக் கடவுள் துடைக்க வருணன் நீர் தெளித்துப் பணிமாற அதனால் தூய்மை போதாமை கண்டு அடியார்கள் அலசி விடுவதும் புனல்விடுவதும் செய்கிறார். -