பக்கம்:நாலு பழங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலு பழங்கள்

5

"இது நன்றாகப் பழுத்து உதிர்ந்துவிட்டது. என்றாலும் இதைத் தேங்காய் என்றுதானே சொல்லுகிறார்கள்? ஆகையால் பழுத்தாலும் காயாக இருப்பது இது" என்று சொன்னான்.

அரச குமாரியின் முகம் மலர்ந்தது. மற்றவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தார்கள், அடுத்தபடி என்ன வரப்போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அரசகுமாரி, "பழம் பழுத்தாலும் பூ இருக்கும் பழம் எது?" என்று கேட்டாள்.

உடனே அந்த அரச குமாரன் ஒரு வாழைக் குலையை மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்து வந்தான். அந்தக் குலையின் நுனியில் வாழைப் பூ, தொங்கியது. இதோ பாருங்கள்; பழமும் இருக்கிறது; பூவும் இருக்கிறது" என்று காட்டினான். அரச குமாரிக்கு மகிழ்ச்சி அதிகமாயிற்று.

அடுத்த சோதனையை அரசகுமாரி சொன்னாள். "பூ மலர்ந்தால் அழகாக இருக்கும். ஆனால் காயாகிப் பழுத்தால் அதை யாரும் விரும்பமாட்டர்கள் என்றேன். அந்தப் பழம் என்ன?" என்று கேட்டாள்.

அந்த அரசகுமாரன் ஒரு நெருஞ்சிச் செடியைக் கொத்தோடு எடுத்துக் காட்டினான். அதில் இலையும், பூவும், முள்ளும் இருந்தன. "இதோ பாருங்கள்; இந்தப் பூமஞ்சளாக அழகாக இருக்கிறது. ஆனால் இந்தப்பூ காய்த்துப் பழமானால் முள்ளாகி விடுகிறது. இதை யார் விரும்புவார்கள்?" என்று கேட்டான். சபையில் இருந்தவர்கள் குதூகலத்தால் ஆரவாரம் செய்தார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/11&oldid=1084194" இலிருந்து மீள்விக்கப்பட்டது