பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158சீவக சிந்தாமணி



“தூக்கம் வருகிறதே” என்றான். படுக்கை அறைக்கும் அனுமதிக்கப்பட்டான்.

யாழ் எடுத்து இசை வாசித்தான்; அவ்வளவுதான்; அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள் எல்லாம் இங்கே ஓடிவந்துவிட்டார்கள்; ஏன்? அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் இல்லை; அவர்கள் சிவனைக் கண்டு தெருவுக்கு ஓடிவந்த ரிஷிபத்தினிகள் ஆகிவிட்டனர்; எல்லோரும் இங்கே ஓடிவந்து விட்டார்கள் இந்த இசையைக் கேட்க

“இது அக்கிரமம்’ என்று கத்த ஆரம்பித்தார்கள். இதை விசாரிக்கச் சுரமஞ்சரி ஓடோடி வந்தாள்.

“இந்தக் கிழவன் இசை கேட்டு வீட்டுக்குமரிகள் அங்கே தம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே இல்லை என்றதும் அவர்களுக்குத் திக்கென்று ஆகிவிட்டது. இங்கே வந்து குவிந்து விட்டார்கள்” என்று அறிவிக்கப்பட்டது.

அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஒருவாறாக அவரவர் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தனர்.

அங்கே சரண்புகுந்த சரணாலயங்கள் இந்த இசையைப் பாடுக என்று வேண்டினர். காய்ந்த நிலம் ஈரம் பட்டுத் தளிர்க்கத் தொடங்கியது. அவர்கள் நினைவுகள் பசுமையை நோக்கி நகர்ந்தன; அந்தக் கன்னிமாடம் மூட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. புல்லைத் தேடி மான்கள் வெளியேற நிச்சயித்து விட்டன.

அவர்கள் மீண்டும் மீண்டும் பாடவேண்டினர்.

சுரமஞ்சரி “இந்த வயதில் ஏன் இங்கு வந்தீர்?” என்று அவனைக் கேட்டாள்.

“குமரியாட” என்றான்.

“அதனால் என்ன நன்மை?”

“மூப்புப் போகும்” என்றான்.