பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரமஞ்சரி இலம்பகம்159



இவள் வாய்விட்டுக் கேட்க வெட்கப்பட்டாள். அவன் பாடிய பாட்டு சீவகன்பாடிய பாட்டாக இருந்தது. அவள் குறிப்பறிந்து அவள் தோழியர்,

“எம் தலைவிக்காக ஒரு பாட்டு” என்றனர்.

“நீங்கள் என்ன தருவீர் அதைக்கேட்டு” என்றான்.

“வேட்டது தருவோம்” என்றனர்.

“எழிற்பாவை வேண்டும்” என்றான்.

“வைத்து விளையாடவா” என்றார்கள்.

“களித்து மகிழ்ந்திட” என்றான்.

“பொற்பாவை தானே; தருகிறோம் பாடு” என்றனர்.

அவன் சிவன்பாடிய சாம கீதத்தை யாழ் இசைத்துப் பாடினான். பாபநாசம் சிவன் அல்ல; பரமசிவன் பாடிய பாட்டு அது.

சுரமஞ்சரி அசுணப் பறவையானாள்; அந்த இசையில் மயங்கினாள்; நிறுத்தினால் அவள் உயிர் போகும் என்று இருந்தது; அவள் நினைவுகள் உணர்வுகள் துண்டப்பட்டன.

சீவகனை அப்படியே ஒடிப்போய் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று வேகம் கொண்டாள்; தாகம் நீடித்தது; இந்தக் கிழவன் சீவகனாக இருக்கக்கூடாதா என்று ஏங்கினாள்; துடிதுடித்தாள்.

“காமனை வேண்டிச் சாமகீதம் பாடி இறைவனை அடைவேன்” என்றாள்.

“நீ சென்று வழிபடு; உன்னை அங்கு வந்து ஆட் கொள்வான்” என்று சொல்லிவிட்டுச் சீவகன் விடை பெற்றான்.

சீவகனைப் பற்றிய சிந்தை அவளுக்கு மொந்தைக்கள் ஆகியது; அந்த மயக்கத்தில் அவள் தான் பேசுவது இன்னது என்று தெரியாமல் பிதற்றினாள்.